Sunday, 1 July 2012

அப்துல்லா....நீ எங்கிருக்கிறாய்?


இடம்: செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், இராமனாதபுரம்.
நேரம் : நண்பகல் 12.45 மணி.
நாள்: ஏப்ரல் 30, 1994
விசேஷம் : என்னுடைய வலது கண் குருடாகிப்போயிருக்க வேண்டியது.

என் வலது கண் குருடாகிப்போயிருக்க வேண்டிய நாள் அது. இன்றோடு ஏறத்தாழ பதினெட்டு வருடங்களைத் தொட்டுவிட்ட மறக்க முடியாத அனுபவம். நான் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். ஆண்டு இறுதித் தேர்வுகளை எழுதி முடித்த பின் இரண்டு மாத கோடை விடுமுறையைச் சந்தோசமாக வீட்டில் கொண்டாடுவதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்த நேரம். அந்த விடுமுறையில் படித்துமுடித்துவிட வேண்டிய சில புத்தகங்களை எவருக்கும் தந்து விடாதபடி ஊரில் இருந்த பொது நூலகத்தின் நூலகர் திரு சந்தான கிருஷ்ணனிடம்  சொல்லிவைத்திருந்தேன். கலைஞர் கருணாநிதியின் "பொன்னர் சங்கர்'', ராஜாஜியின் "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்", சாண்டில்யனின் "ஜலதீபம்", "மூங்கில்கோட்டை", மற்றும் "மஞ்சள் ஆறு" என்று சில புத்தகங்கள் என் நினைவில் இருக்கின்றன.

பள்ளிக்கூடத்தின் உள்ளேயே இருந்த கேண்டீன் ஒன்றில் இரண்டு மூன்று 'பப்பில் கம்' வாங்கி கால் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டு வகுப்பறையை நோக்கித் துள்ளித் துள்ளி வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த ஒரு கிட்டிப்புள்ளின் (சிறிய தடியை அடிக்கப் பயன்படும் பெரிய கனமான கைத்தடி) கனமான முனை இசகு பிசகாமல், குறிபார்த்து வீசப்பட்ட குண்டைப் போல என் வலது கண்ணைப் பதம் பார்த்தது. அவ்வளவுதான்..உலகமே என் கண்களின் முன்னால் இருண்டது. தலை சுற்றியது...அந்த நிமிடத்திலிருந்து என் கண் குருடாகிவிட்டது என்ற பயம் உள்ளுக்குள் இருந்து என்னை ஓர் உலுக்கு உலுக்கியது. அதுவரை நான் அடையாத கோபம், அது நாள் வரை நான் பேசியறியாத கெட்ட வார்த்தைகள் என்னை ஒரு பேயைப்போல ஆட்கொண்டன. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எல்லாமே கருப்பாகத் தோன்றியது. அடித்தவன் யார் என்று தெரியவில்லை. 'என்னவாயிற்று' என்று என்னை ஒருவன் பார்க்கவந்தான்...அவன்தான் கிட்டியை வீசியவன். அவனுடைய சட்டைக்காலரைப் பிடித்துக்கொண்டு "தேவடியா மவனே! என் கண்ணைப் பொட்டையா ஆக்கிட்டேயடா! தாயோலி உன்னைக் கொல்லாம விடமாட்டேண்டா" என்று கத்திக்கொண்டே என்னையுமறியாமல் அவனைக் கீழே சாய்த்து தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் கூட என்னுடைய வெறியைப்பார்த்துவிட்டு விலக்கிவிட முயற்சிக்க வில்லை. கீழே விழுந்தவன் என் அதீத பலப்பிரயோகத்தினாலும், அடித்துவிட்ட குற்ற உணர்ச்சியாலும் பலம் குன்றிப்போய் கைகளால் முகத்தை மறைத்தவாறு அடியை வாங்கிக்கொண்டிருந்தான். சலசலப்பைக் கேட்ட உடற்கல்வி சொல்லித்தரும்  ஆரிஃப் என்னும் தண்டச்சோறும் , இன்னொரு உடற்கல்வி பிராணி ராமதாஸ் என்ற ஒன்றும் தற்காலிகமாக கிட்டிப்புள் விளையாட்டை நிறுத்தின. என் கண்களில் பட்ட அடியின் தீவிரம் அந்த சொறியன்களைப் பாதிக்கவில்லை. விலக்கிவிட்ட பின் ஏதோ ஒன்றும் நடக்காதது போல் தத்தம் கதை பேசியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தன.

நான் என்னுடைய வலது கண்ணை இறுகப் பொத்தியபடி என் வகுப்பறைக்குள் நுழைந்து கத்தினேன். " அவ்வளவுதான்! என் கண் பொட்டையாப் போச்சே! பொட்டையாப் போச்சே! எவனோ ஒரு தேவடியா மவன் என் கண்ணைக் குத்திட்டானே! நான் என்ன செய்வேன்!" அப்படிக் கத்திக்கொண்டே மீண்டும் மீண்டும் கண்பட்டையை விலக்கிக் கொண்டு ஏதாவது தெரிகிறதா என்று சோதனை செய்து பார்த்தேன். இன்னும் சுற்றுப்புறம் கருமையாகவே தெரிந்தது. நான் கத்தியதைக்கேட்டு அங்கே வீண்வாதம் பேசிக்கொண்டிருந்த அப்துல்லா என்னிடம் வந்தான். அவன் அதே வகுப்பில் கடந்த ஐந்து வருடங்களாக 'ஃபெயில்" ஆகி அது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கத்தின் சாயல் இல்லாமல் இன்னும் தாட்டியம் செய்துகொண்டும் எவனையாவது அடித்துத் துன்புறுத்திகொண்டும் பலான படங்கள் பார்த்துவிட்டு 'அந்த விஷயங்கள்' குறித்த தன்னுடைய தாங்கு திறனைப்பற்றி விலாவாரியாக வியாக்கியானம் செய்து கொண்டும் காலத்தைப் போக்கிக்கொண்டு இருந்தவன். அவனுக்கும் எனக்கும் நல்ல உறவு என்ற ஒன்று இருந்ததே இல்லை. என்னைப் பார்த்தால் ஏதோ கிள்ளுக்கீரையைப் பார்ப்பது போலப் பார்ப்பான். எப்போது  பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருப்பான். வகுப்பில் நான் அவனை பார்க்கும் தோரணை யாரும் அவனை இதுவரை அப்படிப் பார்த்தது இல்லை என்றும், நான் மட்டும்தான் அப்படிப் பார்க்கிறேன் என்றும், பிறகு நேரம் வரும்பொது தக்கவாறு கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்வான். அதாவது நேரம் வரும்போது என்னை அடித்து நிமிர்த்த சந்தர்ப்பம் வாய்க்கட்டும், பிறகு பார்க்கலாம் என்பதே அதன் பொருள். அப்படிச் சொல்வானே தவிர ஒன்றும் செய்யமாட்டான். அவனுக்கு அவனுடைய பகுதியில் பல தொடர்புகள் உண்டு. தினமும் வந்து சென்றைய தினம் எங்கே சென்று யாரை அடித்தோம் என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பான். அவன் சொல்வது பொய் என்று தோன்றும். ஆனால் அவன் அந்த மாதிரி செய்பவன்தான் என்று அவனுக்கு நெருக்கமாக இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

அப்படிப்பட்ட அப்துல்லா என்னை வந்து பார்த்தவுடன் அப்படியே உறைந்து போய்விட்டான். "எந்தப் பு....டா மவன்டா இப்படிச் செஞ்சான் ?'' என்று அலறினான். யாரோ ஒருவன் ஏதோ ஒரு பெயரைச் சொன்னான். எந்த நோக்கமும் இல்லாமல் வகுப்பறையின் வாசலுக்கு வந்து மீண்டும் அதே வாக்கியத்தைச் சொல்லிக் கத்தினான். யாருமே பதில் சொல்ல வில்லை. " எப்படிடா இருக்கு சரவணா இப்ப " என்று கேட்டான். "இன்னும் வலிக்குது...ஒன்னுமே தெரியல'' என்றேன் நான். என்னை அப்படியே கைத்தாங்கலாக அணைத்தவாறு சைக்கிள் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்றான். என் வலி பள்ளி நிர்வாகத்திற்கு வலிக்கவில்லை. அப்துல்லாவிற்கு வலித்தது. என்னை சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ராமனாதபுரம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றான். சிறிது தொலைவு சென்ற பின் சைக்கிளை நிறுத்தி "முன்னால் வந்து உட்கார். மயக்கம் போட்டு கீழே உழுந்தாலும் உழுந்துடுவே  " என்று சொல்லி முன் பாரில் உட்கார வைத்து உஸ்...உஸ் என்று பெரிய மூச்சு விட்டபடி சைக்கிளை அழுத்திக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரியை அடைந்தான். மற்ற வகுப்புத் தோழர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கிருந்த தகுதி பெறாத மருத்துவர்கள் இந்தக் கண்ணை இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்ன போது ஏறத்தாழ அவன் அழுதே விட்டான். " கவலைப்படாதேடா...அல்லா இருக்காரில்ல...அவர் உன் கண்ணைக் காப்பாத்துவாருடா...என்று சொல்லிக்கொண்டு ''அல்லா''...''அல்லா'' என்று இரு முறை சொன்னான். சொல்லிவிட்டு என்னுடைய தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொண்டான். வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு யாராவது வரும்வரை காத்திருந்தான்.

என்னுடைய பெரிய அண்ணனுக்குத் தகவல் தெரிந்து அவர் ராமனாதபுரம் வந்தார். அதுவரை பெரிய ஆஸ்பத்திரியிலேயே படுத்துக்கிடந்தேன். வலது கண் வீங்கிப்போய்விட்டது. வெண்பகுதி முழுவதும் குங்குமத்தை பசையாக்கி அப்பியதைப் போல காணப்பட்டது. மெதுவாக கருவிழியும் கொஞ்ச நேரத்தில் சிவப்புக் கலரால் மூடப்பட்டு விடும் என்று தோன்றியது. கண்ணில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரனின் கண்கள் போல எலுமிச்சம் பழம் அளவுக்கு வீங்கி மொத்தக் கண்பார்வையும் மறைந்து விட்டது.

பின்னர் என் அண்ணன் வந்தார். என் வாழ்க்கையை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் செதுக்கிய சிற்பி அவர். "சந்திரசேகரன் கண்மருத்துவமனை" என்ற தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் என்னைச் சேர்க்கும் வரை அப்துல்லா கூடவே இருந்தான். என் அண்ணனைப் பார்த்துச் சொன்னான்: ''ஒன்னும் ஆகாது அண்ணே! நான் அல்லாக்கிட்ட தொழுதிருக்கிறேனில்ல...ஒண்ணும் ஆகாது...

''உன் பெயர் என்னப்பா'' என்று அவனைப் பார்த்துக்கேட்டார் என் அண்ணன்.

"அப்துல்லாண்ணே"  என்று தன்  தோள்களைக் குலுக்கிக்கொண்டவாறே சொன்னான்.

''ரொம்ப நன்றிப்பா...." என்று கொஞ்சம் தழுதழுத்தவாறு சொன்னார் என் அண்ணன். அவர் என்னை நேசித்த விதம் அவரை அழச் செய்திருந்தது.

கொஞ்ச காலத்தில் என் கண் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. அதற்குள் நான் பட்ட சிரமங்கள் கொஞ்சம் அதிகம்தான். அதற்குப்பிறகு பத்தாம் வகுப்பிலும் அப்துல்லா பாஸாகி வந்து படித்தான். அதன் பிறகு என்னவானான் என்று தெரியவில்லை. சிலர் சொன்னார்கள். மிகவும் குண்டாகி சவூதி அரேபியாவில் ஏதோ சொந்த வியாபாரம் செய்ததாகவும் இப்போது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

அப்துல்லா நீ எங்கிருக்கிறாய்..........?

சரவணன்.கா

You can also visit www.solitaryindian.blogspot.com to read my writings in English.