Wednesday, 10 October 2012

அரளித்தாகம்


எவருக்கும் பிடிக்காது
என்னிடம் தினம் பேசும்
அரவமற்ற இரவுகள்....
தெளிவில்லாத நிலவுகள்...
தெருக்கூச்சல் அடங்கிய பொழுதுகள்....

எவருக்கும் தெரியாது
சகதிக்குள் புதைய விரும்பும்
ஆற்றுச் சரளையாய் என் மனம்....
புகைந்த புல்லாய் புழுங்கும் -என்
விதவை உடலம்...

விழாதவரை இருந்தது வீரியம்....
வீழ்ந்தபின் சரிந்தது சுயம்...
தொடாமைவரை இருந்தது தெளிவு
தொட்டபின் ஆனது கலக்கம்...

தணிந்தது போல்தான் இருந்தது தாகம்.
தணிக்க வந்தது ஜீவநதியல்ல...
சூரியன் கண்டு சுண்டும் பனித்துளி....
அதுதான் என்
வற்றிய பொட்டலின்
ஒரே ஈர அடையாளம்!  

தெரியாத இருட்டில் தொடரும்
என் தாகம் தணியாத பயணம்....
தெரிந்தபின் முடிவுறும்
என் அரளித்தாகம்.

சரவணன்.கா