(இந்தக் கட்டுரை
என்னுடைய ஆங்கில வலைப்பதிவில் நான் பதிவு செய்துள்ள “Mobile phone
molestations and girls’ suicides” என்ற ஆங்கிலக்
கட்டுரையின் மிகநெருங்கிய தமிழ் வடிவம். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பை
எதிர்பார்க்க வேண்டாம். ஆங்கில மூலத்திற்கு www.solitaryindian.blogspot.com என்ற இணைப்பை அணுகவும்)
மற்ற நவீனகாலத்திய தொடர்பு
சாதனங்களுக்கு மத்தியில் புகைப்படம் எடுக்கும் வசதியுடன் கூடிய கைப்பேசிகள்
நம்முடைய காதல் முயக்கம் கொண்ட வஞ்சகர்களின் கைகளில் மிகவும் எளிதாகக்
கையாளுவதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டவைகளாக இருக்கின்றன. நெடுநாளைக்கு முன்பாக
இல்லை, தமிழ் செய்தித்தாள் ஒன்றில் செய்தி ஒன்று படித்தேன். அதில் சிறுமி ஒருத்தியின்
புகைப்படத்தை அவள் குளிக்கும்போது அவளுடைய நெருங்கிய சொந்தக்காரன் ஒருவன்
மறைந்திருந்து எடுத்து பின்னர் அதைக் காட்டி அவளை தன்னுடைய இச்சைக்கு உடன்படும்படி
வற்புறுத்தி இருக்கிறான். மறுக்கும் பட்சத்தில் அந்த படங்களை இணையத்தளங்களில் ஒட்டிவிடப்போவதாகவும் மிரட்டி
வந்திருக்கிறான். பயந்து போன அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டாள் என்பதே அந்த
செய்தி.
இன்னும் மோசமான
விஷயம் என்னவென்றால் இந்த மாதிரியான செயல்கள் எல்லா இடங்களிளும் அவற்றின் வீரியம்
தெரியாமல் சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதத்தோடோ அல்லது அவர்களுக்கே தெரியாத
வகையிலோ நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இறுதியில் பார்க்கப்போனால்
செத்துப்போவது அந்தப் பெண்கள்தான். அந்த மாதிரியான படங்களில் காட்டப்படுவது
ஆண்குறியாக இருந்தால் அதில் தொடர்புடையவன் அதனை மீண்டும் காட்டி தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க
வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் சமுதாயம் இது. அதே நேரத்தில் அதுவே பெண்களுடையதாக
இருக்கும் போது அவள் உச்சக்கட்டமான நடவடிக்கையாக தன்னைத் தானே
மாய்த்துக்கொள்கிறாள். அறியாத சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்த
மாதிரியான கழுகுகளுக்கு இரையாவதைப் பார்க்கும்போது உண்மையாகவே வலிக்கிறது.
பள்ளிச்சிறுமிகள் மட்டுமல்ல, சில நேரங்களில் படித்த பெண்களும் கூட இந்த மாதிரியான
வலையில் சிக்குண்டு விடுகிறார்கள். முந்தையவர்கள் இந்த உலகத்திலேயே அவர்களை
மட்டுமே காதலிப்பதாக நடிக்கும் அவர்களுடய காதலனால் அவர்களுடைய காதலை அந்தக் கழுதைக்கு
நிரூபிக்க வேண்டி அந்த மாதிரியான செயல்களைச் செய்ய வேண்டி சபலப்படுத்தப்/நிர்ப்பந்தப்படுத்தப்
படுகிறார்கள். பிந்தையவர்களோ தங்களின் படித்த, தொழில் நுட்பக்கூர்மை கொண்ட,
உண்மையான, மிகவும் நம்பகமான காதலர்களால் அல்லது கணவர்களால் அந்தமாதிரியான
வீடியோக்கள் தாங்கள் பார்ப்பதற்கு மட்டுமே பிறர் பார்ப்பதற்கு அல்ல என்று
உறுதியளிக்கப்படுவார்கள். எல்லாம் முடிந்தபின்னர் அந்த வீடியோக்களை தங்களது
அந்தரங்கமான இடம் தாண்டி பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறுமியின் ஒரு பெண்ணின்
மானத்தைச் சிதைப்பதில் கொஞ்சம் கூட மன உறுத்தல் இன்றி செயல்படுபவர்களாக இந்த
மூர்க்கர்கள் இருக்கிறார்கள். சில சமயங்களில் கைப்பேசி மற்றும் மடிக்கணிணி
பழுதுபார்க்கும் கடைகளில் ஏற்கனவே அழிக்கப்பட்டு இருந்தாலும் அந்த மாதிரியான
வீடியோக்களை மீட்பு மென்பொருள் உதவியுடன் மீண்டும் பிரித்து எடுத்துவிடுகிறார்கள்.
இது மாதிரி அழிக்கப்பட்ட கோப்புகள் மறுசுழற்சி தொட்டியில் (recycle bin) இருந்து அகற்றப்பட்டாலும்கூட மடிக்கணிணியின் அடிப்படை
நினைவுத் தகட்டில் (hard Drive) அவற்றை சுலபமாக மீட்டெடுத்துவிட முடியும் என்ற உண்மை பல
நேரங்களில் இந்த விவரம் தெரிந்தகுஞ்சுகளுக்கும் கணவன்களுக்கும் தெரிவதில்லை.
பின்னர் அவையாவும் இணையம் முழுவதும் வைரஸ் வியாதியைப் போல வலம்வரும்.
இது குறித்து என்ன
செய்யலாம்?
முதலில் இளம்பெண்கள்
ஓர் உண்மையை மனதில் கொள்ளவேண்டும்: அதாவது இந்த மாதிரியான விஷயங்கள் எந்தவொரு
உறுத்தலின் அறிகுறியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் ஓர் அசிங்கமான வக்கிரமான
சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு
மிகவும் நெருங்கியவர்கள் என்று சொல்லப்படுவர்களே இந்த மாதிரியான கழிசடைக்காரியங்களைச்
செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையிலான உறவில் இருக்கும் ஒரு
சிறுமியோ பெண்ணோ தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இடைவெளி என்று அழைக்கப்படும்,
அதாவது ஒரு நாகரீக எல்லைகொண்ட எவரும் தாண்டக்கூடாத இடைவெளி இருப்பதை கண்டிப்பாக
நினைவில் கொள்ளவேண்டும். உறவு முறை சொல்லிக்கொண்டுவரும் எவனோ, நண்பரோ, காதலர்களோ
வீடாக இருந்தாலும் சரி, கல்லூரியாக இருந்தாலும் சரி இல்லை வேறு எந்த இடமாக
இருந்தாலும் சரி, இந்தத் தனிப்பட்ட இடைவெளியைத் தாண்டிவர அனுமதிக்கப்படும்போதுதான்
அவளுடைய தனிமையும் கண்ணியமும் லேசாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக
தங்களுடைய மகள் விஷயத்தில் பெற்றோர்கள்
கூட இந்த இடைவெளிக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நுழைவதை நிறுத்திவிட
வேண்டும் என்பேன் நான். இந்த இடைவெளியின் முக்கியத்துவத்தையும், அது எந்த அளவு
அவளுடைய கண்ணியத்திற்கு அவசியமானது என்பதையும் அவர்கள் அவளுக்குச் சொல்லித்
தரவேண்டும்.
தாங்கள் எந்த
மாதிரியான ஆண்களைத் தினம் தினம் சந்தித்துப் பழகிக்கொண்டு இருக்கிறோம் என்பது பல
நேரங்களில் சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ தெரிவதில்லை. எவனாவது ஒருவன் அவளுடைய
அத்தைப் பையன் என்று சொல்லிகொண்டு வந்தால் தாங்கள் இல்லாத சமயத்தில் தான்
மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவன் உள்ளே நுழைய அவனை
அனுமதித்த அவளுடைய பெற்றோர்கள்தான் முதன்மையான குற்றவாளிகள். இந்த மாதிரி
நுழைபவர்கள் யாருக்கும் தெரியாமல் குளியலறை சன்னலிலோ கூரை விசிறியிலோ மறைக்கப்பட்ட
புகைப்படக் கருவியை பொருத்திவிட்டு சென்றுவிடும் நிகழ்ச்சிகள் பல
நடந்திருக்கின்றன. தொழில் தேர்ச்சி பெறாத வகையில் எடுக்கப்பட்ட, ஒரே திசையில்
இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் இதற்குச்சான்று. பாலின சமானத்தைப் பற்றிப்
பேசுவது என்னுடைய காதுகளில் இசைபோலத்தான் பாய்கிறது. ஆனால் ஏதாவது ஒன்று கிடக்க
ஒன்று ஆகிவிடும் போது பெண்களின் கற்புதான் சிரமத்திற்கு உள்ளாகி விடுகிறது. ஆண்கள்
தரமற்றவர்களாக இருக்கும்போது வெறுமனே ஆண்களும் பெண்களும் கலந்து பழகவேண்டும் என்று
கண்மூடித்தனமாக போதனை செய்யமுடியாது. தாங்கள் நுழைந்த நேரம் சரியான நேரம் இல்லை
என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் கலந்து
பழகும்போது அது எந்தப் பிரச்சினையையும் உண்டு பண்ணுவதில்லை. சமயம் பார்த்துக்
காத்திருப்பவர்களுடன் அல்ல.
இரண்டாவதாக, தீங்கற்றதாகக்
கருதப்படும் ஆண்களின் எல்லைமீறலை எளிதாக எடுத்துக்கொள்வதும், கிறுக்குத்தனமான
தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்களை நோக்கிய உறவு சம்பந்தப்பட்ட உரிமை என்று அதனை கருதுவதும் சமயங்களில் இந்த
மாதிரியான அசிங்கமான விவகாரங்களில் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
மூன்றாவதாக, பெண்கள்
ஆண்களுடன் கொள்ளும் காதல், பிணைப்பு போன்ற விவகாரங்களில் தேவைக்கதிகமாக
உணர்ச்சிவசப்படக்கூடாது. ஆண்கள் என்ன செய்தாலும் அவர்களை கண்மூடித்தனமாக நம்பவும்கூடாது.
புகைப்படம் எடுக்கும் வசதிகொண்ட கைப்பேசிகளை தயாரிப்பதை நிறுத்தும்படி அதனைத்
தயாரிப்பவர்களைக் கேட்டுக்கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியம். ஆண்களை
நம்பாமல் இருப்பதால் ஒன்றும் குறைந்து போய்விடப்போவதில்லை. தாங்கள் விரும்பாத
ஒன்றைச் செய்து ஒருவர் மீதான தங்களுடைய காதலை நிரூபிக்க அவசியம் அவர்களுக்கு
கண்டிப்பாக இல்லை என்பது பெண்களுக்குப் போதிக்கப்படவேண்டும். ஒருவன் நல்லவனாக
இருந்தால் அவன் தன்னுடைய காதலியிடம் இருந்து அவளுக்குப் பிடிக்காத ஒன்றை வற்புறுத்தமாட்டான்.
அவர்களை தொலைவிலேயே வைத்திருங்கள். எப்போதும் உங்களுடைய தனிப்பட்ட இடைவெளிக்கு
மதிப்புக் கொடுங்கள். எந்த ஒரு வீணனையும் அதற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
அதையும் மீறி நுழைந்தால் அதனை மிகவும் கடுமையாக அணுகுங்கள், உங்களுடைய
கண்ணீயத்தின் மீதான சுயமரியாதையின் மீதான ஆக்கிரமிப்பாக அதனைக் கருதுங்கள்.
நான்காவதாக அவர்கள்
உங்கள் முன்னிலையில் புகைப்பட கைப்பேசியைக் கையாளும்போது கவனமாக இருங்கள். அவன்
நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவன் எப்போதுமே நல்லவனாகவே இருப்பான். ஆனால் அவன்
எப்படிப்பட்டவன் என்பது யாருக்குத் தெரியும்? குளிக்கும்போது, தூங்கும்போது,
நெருக்கமாக இருக்கும்போது படம் எடுப்பது என்பது அவனை உங்களுடைய தனிப்பட்ட
இடைவெளிக்குள் நுழைய அனுமதித்தால் அன்றி நடக்க சாத்தியமில்லை. உங்களுக்கு பத்து
வயதாகும்போது உங்களுடைய தந்தையும் சகோதரனும் கூட உங்களை சிரமபடுத்தும் எல்லைக்குள்
நுழையும் உரிமையை இழந்து விடுகிறார்கள். கவனமாக இருக்க வேண்டும் பெண்களே! இந்தச்சமூகம்
இன்னும் ஆணாதிக்க சமூகமாகவே இருக்கிறது. நான் சொல்வது மடத்தனமானதாக தோன்றலாம்...இருப்பினும்
நான் சொல்வது உண்மையில் இருந்து தொலைவில் இருக்கும் ஒன்றல்ல.
ஊடகங்களும் ஒரு
பொறுப்பான பங்கு வகிக்க வேண்டும்---குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிடும் அதே
நேரத்தில் பலியானவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவளை
மேலும் மேலும் மானபங்கப்படுத்திவிடுகிறது. பள்ளிக்கூடங்களில் தொடக்கத்தில் இருந்தே
மாணவிகளை எப்படி மதிக்க வேண்டும் என்பது
மாணவர்களுக்கும், தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் ஆண்களை
எப்படி அணுக வேண்டும் என்பது மாணவிகளுக்கும் சொல்லித்தரப்பட வேண்டும். பாலினம்
குறித்த ஓர் உளவியல் ரீதியான புரிதலோடு பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும்
குற்றங்கள் மற்றும் ஒன்றும் அறியாத சிறுமிகள் தாங்கள் பெண்கள் என்ற ஒரே
காரணத்திற்காக எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தபடுகிறார்கள்
என்பன போன்ற விஷயங்களும் சொல்லித்தரப்படவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை
பெற்றுத் தந்துவிடுவதனால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. இருந்தாலும்
அதை அப்படியே ஒதுக்கிவிடவும் முடியாது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் துறைகள்
இன்னும் கடுமையானதாகவும் இந்த மாதிரியான குற்றங்களை இந்த மாதிரியான ஆண்கள்
மீண்டும் புரியத்துணியாத வகையில் தடுப்புவீரியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இந்தக்குற்றங்களை வெறுமனே இத்தனை வருடங்கள் என்ற கணக்கில் தண்டனை பெறும்
கொள்ளைக்குற்றம் போலவோ சில்லறைத் திருட்டுக் குற்றம் போலவோ கருதி செயல்பட்டால் ஒரு
பெண்ணின் உடல் மீது நடத்தப்படும் ஒரு குற்றத்தின் வீரியம் புரிந்துகொள்ளப்படாமலேயே
போய்விடும்.
சரவணன்.கா
To read my blogs in English please visit www.solitaryindian.blogspot.com