Tuesday, 11 November 2014

நாலு ரூபாய்

(ஆர்.கே. நாராயண் எழுதிய “Four Rupees” என்ற சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளேன். அவர் எழுதிய பல சுவையான சிறுகதைகளுல் இந்தக் கதையும் ஒன்று. இந்தக் கதையில் வரும் உரையாடல்களை பேச்சு மொழியிலேயே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நகைச்சுவையான கதைபோல தோன்றினாலும் அடிமட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளி வர்க்கத்தைப் பற்றிய ஒரு சிறு பதிவுதான் இக்கதை. அவர் எழுதிய சில சிறுகதைகளின் தொகுதி“ Under the Banyan Tree & Other Stories” என்ற நூலில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது)

தான் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது ரங்கனுக்கு ஒருபோதும் நிச்சயமாக தெரிந்ததே இல்லை. கபீர் சந்தில் இருக்கும் அவனது சிறிய வீட்டை விட்டு வெளியே கிளம்புவான், சந்தை சாலையில் இருக்கும் ஒரு திருப்பத்தை அவன் அடையும் சமயம் ஏதாவது ஒரு எடுபிடி வேலை அவனுக்காக காத்திருந்ததைப்போல அவனுக்குக் கிடைக்கும். இன்று அவன் சந்தையில் இருக்கும் அலங்கார நீரூற்றின் அருகாமையில் உட்கார்ந்திருக்கும்போது முற்றிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு வேலை அவனைத் தேடி வந்தது. நகர் விரிவாக்கப்பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் வேலை பார்க்கும் வேலையாள் ஒருவன் கண்களில் விளக்கெண்னையை ஊற்றிக்கொண்டு எதையோ தேடியலைந்து கொண்டிருந்தான். அவனே வந்து விளக்கினான்: “எங்கள் வீட்டிலிருந்த பித்தளைப் பானை ஒண்ணு கிணத்துக்குள்ள விழுந்துருச்சு. அதை வெளியே எடுக்கணும். உனக்கு அப்படி யாரையாவது தெரியுமா?’’

“அதுக்கு அவங்க எவ்வளவு குடுப்பாங்க?

“அதைச் செய்ய உனக்கு எவ்வளவு வேணும். அதைச் சொல்லு”

“முதல்ல நான் அந்த கிணத்தைப் பார்க்கணும். இரண்டு ரூபாய்க்கு குறைஞ்சு என்னால வேலை செய்ய முடியாது” என்றான் ரங்கன்.

“சரி. என் பின்னாடி வா” என்று வந்தவன் சொன்னான். ரங்கனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் சொன்னது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது அவன் ஒருக்காலும் எதிர்பார்க்காத ஒன்று. இதற்கு முன் அவன் எந்த ஒரு கிணற்றுக்குள்ளும் குதித்ததில்லை. தேவையில்லாமல் மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்து வரமுடியாது என்று சொல்ல முயற்சித்தான். ஆனால் வந்தவன் விடுவதாய் இல்லை. அவன் ரங்கனின் மணிக்கட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தன்னோடு ஏறக்குறைய இழுத்துக்கொண்டு சென்றான். ரங்கனும் தனது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே வந்தான். “எனக்கு கிணத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாதுய்யா. என்னை விடுயா” என்று கத்திக்கொண்டு அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றான். “அய்யோ அப்படி சொல்லாதே. முதல்ல கிணத்தை வந்து பார்” என்று அவனை நெருக்கிப் பிடித்தவாறு சொன்னான் அந்த வேலையாள். அவனே மேலும் தொடர்ந்தான் “கடந்த நாலு நாளா அந்த வீட்டுக்கரங்க என் பிராணனை வாங்கிக்கிட்டு இருக்கானுங்க. பானைய வெளியே எடுக்க இன்னைக்கு நான் ஏதாவது செய்யலேண்ணா அவ்வளவுதான் என்னை வேலையை விட்டே தூக்கிருவாங்க”

“ஆனால் எனக்கு கிணத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாதே”

“உஷ். இந்த உளறல் எல்லாம் எங்கிட்ட செல்லாது “ என்று அவனைக் கடிந்துகொண்டான் வேலையாள். ரங்கனைப் பார்த்து லேசாக பூடகமாக சிரித்துக்கொண்டு சொன்னான்: ஏதாவது கூடக்குறைய ஒரு அனா இல்லை இரண்டு அனா வேணுமின்னா கேளு. அதைவிட்டு இந்த மாதிரி கூனி வேலையெல்லாம் கூடாது. புரியுதா” 

“ஆனா...ஆனா....” என்று ரங்கன் தடுமாறினான். வந்தவன் அவனுக்கு புகைப்பதற்கு பீடி ஒன்றைக் கொடுத்து அவனை அமைதியாக்கினான். விதிவிட்ட வழி என்று ரங்கன் அவனை பின் தொடர்ந்தான். 

நகர் விரிவாக்கத்தில் அமைந்திருந்த அந்த பங்களாவின் வாசலின் எல்லோரும் குழுமியிருந்தார்கள். முதலாளி, அவரது மனைவி மற்றும் இரண்டு பையன்கள். வேலைக்காரனைப் பார்த்த மாத்திரத்தில் கூக்குரலிட்டார்கள்: “யாரையாவது பார்த்தியா?”

“இந்த கொண்டாந்திருக்கேன் பாருங்க” என்று ரங்கனை சுட்டிக்காட்டி சொன்னான் வேலைக்காரன். என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான் ரங்கன். முதலாளி சொன்னார்: “ பித்தளைப் பானை ஒண்ணு கிணத்துக்குள்ளாற விழுந்துருச்சு. நீ அதை வெளியே எடுக்கணும்” 

“நான் எப்படி முதலாளி ...என்று இழுத்தான் ரங்கன். அந்த சமயம் பார்த்து வேலைக்காரன் குறுக்கே விழுந்து சொன்னான்: “ இந்தப் பிரச்சினையை எங்கிட்ட விடுங்க முதலாளி. அவன் அதை செஞ்சிருவான்.” இதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரும் ஏதோ ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார்கள் என்பது முதலாளிக்குப் புரிந்துவிட்டது. பிறகு வெறுமனே சொன்னார்: “சரி. சரி. முதல்ல கிணத்தைப் பார்க்கலாம். 

அவனை வீட்டுக்குப் பின்புறமாகக் கூட்டிச்சென்றார்கள். முதலாளியும் மற்றவர்களும் தன்னை ஒரு முக்கியமானவன் போல் கருதி நடந்துகொள்வதைப் பார்த்த ரங்கனே தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து சிலாகிக்கத் தொடங்கிவிட்டான். அவனைச் சுற்றி இருந்த எல்லோரும் அந்த பித்தளைப்பானை எப்படி உள்ளே விழுந்தது என்பதை அவனுக்கு விளக்கிக்கொண்டு இருந்தார்கள். உம்மென்று அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான் ரங்கன். பிறகு சொன்னான்: “கயிறு இத்துப்போயிருக்கும்” அதைக் கேட்டவுடன் அவர்கள் அதனை ஆமோதித்த விதத்தைப்பார்த்து தான் ஒரு மிக முக்கியமான தகவலை அவர்களுக்கு தெரிவித்து விட்டதைப்போல நெஞ்சு விம்ம புளகாங்கிதம் அடைந்தான் ரங்கன். பிறகு அந்தப்பானையின் சரித்திரத்தை அவர்கள் அவனுக்கு விளக்கினார்கள்: அது எந்த மாதிரியான ஒரு புராதனப் பாத்திரம், எப்படி கொள்ளுப்பாட்டனின் கலியாணத்துக்கு சீர்வரிசையாக வந்தது அது, எப்படி பரம்பரை பரம்பரையாக கைமாறி வந்துள்ளது என்பதையெல்லாம் அவர்கள் சொல்ல சொல்ல இடித்த புளி போன்று கேட்டுக்கொண்டு இருந்தான் ரங்கன். அந்த வேலைக்காரனை கோபமாக அவர்கள் பார்த்தார்கள். வீட்டுக்கார அம்மையார் கத்திச் சொன்னார்: “இந்த பாத்திரத்தை தொடாதேண்ணு இந்த முட்டாள்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருப்பேன். கேட்டானா அவன்....” 

“கிணத்துக்குள்ள இருந்து தண்ணி எடுக்கணும்னா துத்தனாகப் பாத்திரத்தை மட்டுந்தான் பயன்படுத்தணும்” என்று பெரிய அறிஞன் ஒருவன் பேசுவதைப்போல சொன்னான் ரங்கன். அவன் சொன்னது நியாயம் என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். தான் ஒரு நிரூபிக்கப்பட்ட முக்கியஸ்தன் என்ற எண்ணம் ரங்கனுக்கு ஏற்பட்டது. 

அவர்கள் கிணற்றின் வாயை மூடியிருந்த தடுப்பை அகற்றினார்கள். ரங்கன் உள்ளே எட்டிப்பார்த்தான். அவனது இருதயம் காற்று வாங்கிக்கொண்டதைப் போல இருந்தது. கரடு முரடாக இருந்த அந்த இருள் சூழ்ந்த சுரங்கத்துக்கு அப்பால் அடியில் தேங்கியிருந்த நீர்த்திட்டு லேசாக மின்னியது. “ ரொம்ப ஆழமான கிணறாக இருக்கும் போலிருக்கே” என்று சொன்னான் ரங்கன்.

“வெறும் அறுபது அடிதான்”

“நாங்க பொதுவா நாப்பது அடிக்கு மேல இருக்குற கிணத்துக்குள்ள எறங்குறது இல்லையே” என்றான் ரங்கன்.

“உனக்கு எட்டு அனா அல்லது அதுக்கு மேலே வேணுமின்னாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று அவர்களும் விடுவதாய் இல்லை. 

“எனக்கு நாலு ரூபாய் வேணும். இல்லாட்டி என் உயிரை தேவையில்லாம பணயம் வைக்க முடியாது” என்று பதில் சொன்னான் ரங்கன். 

கொஞ்ச நேரம் முணுமுணுத்த பின் அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.பிரச்சினையில் இருந்து தப்பிக்க ரங்கன் செய்த கடைசி முயற்சியும் இறுதியில் பலனற்றுப்போனது. ஒரே சமயத்தில் நாலு ரூபாயை ஒட்டுமொத்தமாக அவன் சம்பாதித்ததே இல்லை. நாலு ரூபாய் என்பது அவன் மட்டிலும் ஒரு கவர்ச்சியான தொகைதான். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எந்த வேலைக்கும் போகத் தேவையில்லை. பொண்டாட்டியையும், மாமியாரையும் ஒரேயடியாக ஊமையாக்கிவிடமுடியும். இருந்தாலும் தலைசுற்ற வைக்கும் ஆழத்தில் கிடக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரை ஒருதடவை எட்டிப்பார்க்கும்போது நாலு ரூபாய் தந்த சந்தோஷம் காணாமல் போய்விடுகிறதே. அப்படியே ஓடிப்போய்விடலாமா என்றுகூட யோசித்தான். திருப்திகரமான தொடக்கநிலை ஆய்வு ஒன்றை மேற்கொண்ட மனிதனைப்போல கிணற்றில் இருந்து திரும்பி எல்லோரையும் பார்த்து சொன்னான்: “சரி.. எல்லாம் சரியாத்தான் இருக்கு. நான் இன்னைக்கு சாயங்காலம் வர்ரேன். இப்ப நான் வீட்டுக்குப் போகணும்.”

“ஏன்?”

அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. தான் இன்னும் சாப்பிடவில்லை என்று முணுமுணுத்தான். உடனடியாக அவனை தாழ்வாரம் வழியாக கூட்டிக்கொண்டு சென்று அவனுக்கு முன்னால் இலை ஒன்றை விரித்து உணவு பரிமாறினார்கள். தான் எங்கிருக்கிறோம் என்பது கூடத்தெரியாமல் வயிறுமுட்ட சாப்பிட்டான் ரங்கன். அவனைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு இன்னும் அதிகமாகச் சாப்பிடச் சொன்னார்கள். வெற்றிலையும் பாக்கும் கொடுத்தார்கள். உதடுகள் ரத்தச் சிவப்பாக மாறும்வரை அவன் அதை குதக்கி மென்றான். அந்த வீட்டில் ஒரு மரியாதைக்குரிய விருந்தினன் போல தன்னை நினைத்துக்கொண்டான் அவன். ஆனாலும் இந்த மரியாதையெல்லாம் எதற்கு என்று நினைக்கும்போது அவனுக்கு வயிறு மொல மொலவென்றது. தற்சமயம் இந்த சிக்கலில் இருந்து விடுபடுவது அசாத்தியமானது என்பது அவனுக்குப் புலனாகிவிட்டது. அரைமணி நேரம் அவனை ஓய்வெடுக்க அனுமதித்தார்கள். பிறகு அவனை கிணற்றுக்கு வரச்சொன்னார்கள். தான் ஏதோ ஒரு சபிக்கப்பட்ட பிறவியைப்போல இருந்தது அவனுக்கு. கிணற்றின் பாதாளத்தை உற்று நோக்கியபடி நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். தன்னை விடுவித்துக்கொள்ள இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்தான்: “என்னால் முடியாது....எனக்கு ஒண்ணும் தெரியாது....” 

“அய்யோ...அப்படி சொல்லாதேயப்பா” என்று அவர்கள் எதிர்கூக்குரல் எழுப்பினார்கள். தான் நீரில் மூழ்கிச் சாவதைப் பார்க்க இவர்கள் அனைவரும் ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு நிற்கிறார்கள் என்று ரங்கன் ஒரு நிமிடம் குழம்பித்தான் போனான். எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு தப்பித்துப்போய் விடலாம் என்றுகூட ஒரு கணம் நினைத்தான். தன்னைச் சுற்றி நின்றவர்களை ஒரு கணம் நோட்டம் விட்டான். அவர்கள் அவனைச் சுற்றி ஒரு வியூகம் அமைத்து நின்றார்கள். தப்பிக்க நினைத்தால் அவர்களே அவனை குண்டுகட்டாக தூக்கி கிணற்றுக்குள் தள்ளிவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் போனது நிதர்சனமாகத் தெரிந்தது. கசங்கிப்போயிருந்த தனது சட்டையைக் கழற்றினான். வேஷ்டியை கோவணம் போல மடித்து இறுக்கிக் கட்டிக்கொண்டான். கயிறு ஒன்றை வரவழைத்தான். கிணற்றுக்கு குறுக்கே இருந்த கம்பத்தில் அதன் ஒரு நுனியைக் கட்டினான். மற்றொரு நுனியை கிணற்றுக்குள் விட்டான். கிணற்றுச் சுற்றுசுவர் மீது ஏறி கயிற்றின் வழியாக மெதுவாக இறங்கினான். சுவற்றின் இருபக்கமும் அழுந்திக்கொள்ள கால்களை விரித்துக்கொண்டான். அப்படியே உள்ளே இறங்கினான். கீழே குனிந்து பார்க்க அவன் துணியவில்லை. உள்ளிருந்த காற்று வெதுவெதுப்பாகவும், இருட்டாகவும் மாறிக்கொண்டு வந்தது. அண்ணாந்து பார்த்தான்- ஊதா நிறத்தில் வானம் ஒரு சிறுவளையமாகத் தெரிந்தது, கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தின் இடுக்கு ஒன்றில் முளை விட்டிருந்த அரச மரக்கன்று ஒன்று தெரிந்தது. மேலே இருந்து அவனை ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்த முகங்கள் மங்கலாகத் தெரிந்தன. “ கவனமா இரு” யாரோ கத்தினார்கள். “ ஏன் இன்னும் தயங்கி நிக்கிறே”. “நான் மேலே வர்ரேன். இதுக்கு மேலே என்னால போக முடியாது. அவர்கள் விடவில்லை. அவனை ஊக்கப்படுத்தினார்கள். இன்னும் சில அனாக்கள் தருவதாய் உறுதியளித்தார்கள். “ நீ ஏற்கனவே பாதி வழி தாண்டிட்டே.....”

“நான் மீண்டு வரலேண்ணா, தயவு செஞ்சு எம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிடுங்க”. இதைக் கேட்டவுடன் மேலே நின்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கழிவிரக்கம் மேலிட தனக்குத் தானே பேசிக்கொண்டான். “வேறு வழியே இல்லை. நான் செத்துப்போக வேண்டியதுதான்.” இன்னும் உள்ளே இறங்கினான். ஒவ்வொரு அடியிலும் இருள் அதிகமாக கவிழ்ந்துகொண்டே வந்தது. பிசாசின் வாய்க்குள் போவது போலிருந்தது. காதுகள் மந்தமாகிவிட்டதைப்போல இருந்தது. நெஞ்சுக்குள் கனமாக ஏதோ வந்து அடைத்துக் கொண்டதைப்போல உணர்ந்தான். கண்கள் மயங்கி செருகிக் கொண்டன. கடைசி எட்டு வைக்கும் போது அவன் அரை மயக்கத்தில் இருந்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. மூளை மட்டும் அடித்துக்கொண்டு இருந்தது. நாலு ரூபாய், நாலு ரூபாய். நான் செத்துப்போகப்போறேனே...என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அல்லது நான் செத்துதான் போய்விட்டேனா? பனிக்கட்டி போலிருந்த தண்ணீர் அவனது கால்களை நனைத்தது. எதையோ நினைத்துக்கொண்டவனாய் கீழே குனிந்தான். கை நிறைய தண்ணீரை எடுத்துப் பருகினான். பிறகு நாலு ரூபாய், நாலு ரூபாய் என்று சொல்லிக்கொண்டே நீருக்குள் பாய்ந்தான். கிணற்றின் அடியில் மணற்பரப்பை அவன் கைகள் துலாவின. கடைசியில் அறுந்துபோன கயிறு ஒன்றின் நுனியைக் கைப்பற்றினான். அவன் அதைப் பிடித்து இழுத்த போது அந்தப் பித்தளைப் பாத்திரமும் அதனோடு சேர்ந்தவாறு வந்தது. 

அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அவனை மேலே இழுக்க வேண்டியிருந்தது. பேச்சு மூச்சற்று சுமார் ஒருமணி நேரம் தரையில் கிடந்தான் அவன். கண்விழித்து பார்த்தபோது அவர்கள் அவனை நோக்கி சொன்னர்கள்: நீ ஒரு நல்ல மனிதனப்பா...இனிமே ஏதாவது உள்ளே விழுந்தா உன்ன கூப்பிடுறோம். நீ எங்க தங்கியிருக்கே?” அவன் தனது இருப்பிடத்தைச் சொல்ல மறுத்துவிட்டான். “என் கூலிய குடுங்க..நான் போகணும்”. அவர்கள் நான்கு ரூபாயும் நான்கு அனாவும் தந்தார்கள். அவன் அதனைப் பார்த்தான். பிறகு அவர்களைப் பார்த்துக் கெஞ்சினான்: “எனக்கு நாலு ரூபாயும் பன்னிரண்டு அனாவும் தர்ரதா உறுதி சொன்னீங்களே எஜமான்!” இதைக் கேட்டவுடன் அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. “ஏண்டா. உன் பேராசைக்கு ஒரு எல்லையே இல்லையா? அந்தப் பாத்திரம் கூட இத்தனை ரூபாய் பெறாது. நாங்க உனக்கு சாப்பாடு போட்டிருக்கிறோம். எல்லாம் கொடுத்திருக்கோம்..போ...போ...திருப்திப்பட கத்துக்கோ” 

“இந்த மாதிரியான முக்கியஸ்தர்களை நாம் ஒருக்காலும் திருப்திப்படுத்த முடியாது. எல்லா இடங்களிலும் இவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள்” என்று அங்கிருந்த ஒருவர் கருத்து தெரிவித்தார். 

ரங்கன் வீட்டுக்குச் சென்றபோது வழக்கம்போல் அவன் மனைவியும் மாமியாரும் வாசற்படியில் நின்று கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டவுடன் அவன் மனைவி பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தாள். “ஏழு மணியாச்சு...இனிமே எப்ப நான் சாமான் வாங்கி...எப்ப சமைக்க? நான் என்ன உனக்கு பிறவி அடிமைண்ணு நினைப்போ! இன்னைக்கு ராத்திரி உனக்கு சாப்பாடு போடாம பட்டினி போட்டாத்தான் உனக்கு நல்ல பாடம் கிடைக்கும். .....”ரங்கன் தன்னிடமிருந்த நாலு ரூபாயையும் நாலு அனாவையும் எடுத்து ஆட்டிக்காண்பித்தான். “ நாலு ரூபாயா! உண்மையச் சொல்லு நீ இத திருடல? அவன் தனது முழங்கையிலும், முட்டியிலும் ஏற்பட்ட சிராய்ப்புகளை அவளுக்குக் காண்பித்து நடந்த எல்லாவற்றையும் விளக்கினான். அதைக் கேட்டபின் அவர்களுக்கு சிரிப்பு தாங்காமல் சொன்னார்கள்: “ நீ கிணத்து பக்கமா போவது எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சதே இல்லையே. எங்கோ எப்படியோ கஷ்டப்பட்டு முட்டி கிட்டி எவன் பாக்கெட்லெ இருந்தோ பணத்தை தட்டிக்கிட்டு வந்துட்டே போலிருக்கு” 


மூலம்: Under The Banyan Tree & Other stories by R. K. Narayan
தமிழில்: சரவணன்.கா 

Tuesday, 10 June 2014

நள்ளிரவில் அவன்...

சாலையில் உராயும்
செருப்பின் ஒலி
அந்தரங்கம் தேடும்
அறைவரை நீளும் நடுநிசி!

எழுந்த கணம் முதல்
விழுந்த கணம் வரை
கனக்கின்ற மனத்தை
உடலுக்குள் ஒன்றாக்கி
எதிர் இருக்கும் உடலோடு
இடம் எதுவெனத் தெரியாமல்
ஏதேனும் ஒற்றைப் புள்ளியொன்றில்
தன்னை மறக்கத் துணிந்த
ஓரிரு நொடித்துளிகளுக்கு சற்று முன்
வீறிட்டெழுந்து அவனைக் குலுக்கி எழுப்பியது
அவன் மௌனிக்க மறந்த
அவனுடைய மொபைல்

அலறல் தந்த குழப்பத்தில்
குவிந்த ஈர உணர்வுகளின்
வடிந்த புள்ளி எதுவெனத் தெரியாமல்
“ஹலோ” என்றான் அவன்.

சரவணன். கா


Monday, 21 April 2014

இலக்கிய மாமேதைக்கு ஓர் இரங்கற்பா

கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்!..
எழுத்துலகம் என்றும் மறக்க முடியாத
இலக்கிய வித்தகன் நீ.

நோபல் பரிசு தந்த மகிழ்ச்சியை
உன் தேசம் தாண்டி
உலகு அனைத்துக்கும் உரியதாக்கியவன் நீ.

அறிவுலகம் உன்னை அறிந்தது
ஆங்கிலம் வாயிலாகத்தான்- எனினும்
தவிப்புகளை தாய்மொழியில் மட்டுமே
படைப்புகளாகத் தந்தவன் நீ.

துயரம் தோய்ந்த தென் அமெரிக்கப் பக்கங்களை
தேச எல்லைகள் தாண்டி
நேசமுடன் பார்க்க வைத்த பெரும் பனித்துளி நீ.

இலக்கியம் படிப்போரை
முயக்கம் கொள்ள வைத்த
அசாத்திய இயக்கம் நீ.

கனவில் பலர் காணும் உயரங்களை
என்றோ தொட்டுவிட்ட இமயம் நீ.

எம்மோடு இன்றில்லை நீ!....
நீ விட்டுச் சென்ற புகழ் வித்துக்கள்
இறப்பென்ற ஒன்று
இப்படிப்பட்டவனுக்கு இல்லை என்பதை
இனிமேல் சொல்லட்டும்.

சரவணன். கா


Thursday, 6 March 2014

சி. சு. செல்லப்பாவின் “வாடிவாசல்” - சில பதிவுகள்

நான் சென்ற வாரம் அலுவலக வேலையாக கோயம்புத்தூர் சென்றுவிட்டு திருச்சிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த நேரம். ரயிலில் பயணம் செய்ய விருப்பமின்றி பேருந்தில் பயணிக்க விரும்பி நான் எடுத்த முடிவு நான் வெகுநாட்களாக மீண்டும் ஒருமுறை படிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஒரு குறிப்பிட்ட குறுநாவல் குறித்து நான் கொண்டிருந்த ஏக்கத்தை போக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில் நடைபாதையில் விஜயா பதிப்பகம் என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை கண்ணில்பட்டது. பேருந்து பயணம் குறித்த என் முடிவை மிகுந்த பயனுள்ளதாக்கி இரண்டு முக்கியமான புத்தகங்களை என் பார்வைக்குக் கொண்டுவந்த அந்த புத்தகக்கடைக்கு என்னுடைய நன்றிகள். அந்த இரு புத்தகங்கள் புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளும் அடங்கிய தொகுதி (மொத்தம் 103 சிறுகதைகள். சத்தியமாக இது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு இல்லை) மற்றும் சி.சு.செல்லப்பா என்ற ஒரு மகத்தான, சுயமரியாதை தொய்யாத, வறுமையிலும் மிகச்செம்மையாக வாழ்ந்த எழுத்தாளன் எழுதிய “வாடிவாசல்” என்ற குறுநாவல். (இது காலச்சுவடு வெளியிட்ட நவீன கிளாசிக் வரிசையில் அடக்கம்). கரூர் வந்து சேர்வதற்குள் படித்துமுடித்தேன். இவற்றை நான் முக்கியமான புத்தகங்கள் என்பது என் சொந்தக் கருத்தல்ல. இந்த இரு எழுத்தாளர்களைப் பற்றி கொஞ்சமேனும் அரசல் புரசல் அறிந்தவர்கள் அதை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.   

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தில்லியில் படித்துக்கொண்டிருந்தபோது “இந்தியா டுடே” வெளியிட்ட சிறப்பிதழ் ஒன்றில் இந்த நாவலைப் படித்ததாக நினைவிருக்கிறது. இரவலில் வாங்கிப் படித்த நாவல் நினைவில் மட்டும் தங்கிப்போனது. கடந்த காலத்தை நினைவூட்டி, கதைகுறித்த களிப்பையும் வற்றாமல் தந்து நினைவுகளை அவ்வப்போது வருடும் புத்தகங்கள் சில நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மரித்துப்போய்விடாமல் காப்பாற்றும் என்பது இலக்கியப்பிரியர்கள் கண்ட உண்மை. அவ்வகையில் அளவில் மிகச்சிறியதாகவும், பிறந்த மண்ணின் கலாச்சார பிம்பங்களை கலப்படமில்லாமல் சொல்வதில் அளப்பதற்கரிய ஆற்றல் கொண்ட அரிய சில தமிழ்கதைகளுல் ஒன்றாக “வாடிவாசலை” நான் கருதுகிறேன்.           

அப்படி என்ன ஆற்றல் கொண்ட கதை இந்த நாவலில் காணக்கிடைக்கிறது என்ற கேள்விக்கு கதை என்னவோ  இதுதான் என்று இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். கிராமம் ஒன்றில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. காளைகளை அடக்க அங்கு வந்திருக்கும் இளைஞர்களில் பிச்சி என்பவன் அடக்கமுடியாத காரிக்காளை (கரிய நிறமுடைய காளை) என்று பெயர்பெற்ற பெரியபட்டி ஜமீன்தாரின் காளையை அடக்க வந்திருப்பதாக சொல்கிறான். சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். அவன் செத்துப்போக வந்திருப்பதாக சிலர் பரிதாபப்படுகிறார்கள். இறுதியில் அதை அடக்குகிறான். முன்பு அவன் தந்தை அம்புலி அந்தக் காளையை அடக்க முயன்று அதில் தோல்வியடைந்து காயம்பட்டு இறந்து விடுகிறான். அவன் இறக்கும் தறுவாயில் சொன்ன வார்த்தைகளுக்காக தான் அக்காளையை அடக்க வந்ததாகச் சொல்கிறான் பிச்சி. இறுதியில் அந்தக் காளை ஜமீன்தாரால் சுட்டுக்கொல்லப்படுகிறது.

செல்லப்பா என்ன நினைத்துக்கொண்டு இந்தக்கதையை எழுதினாரோ அதை அவருடைய மனோதர்மத்திற்கு விட்டுவிடுவது நல்லது. ஜல்லிக்கட்டு குறித்த தனது அடங்காத ஆவலை அவர் இக்கதை மூலம் வெளிப்படுத்தி திருப்திப்பட்டுக் கொண்டாரா அல்லது ஜல்லிக்கட்டும் அது குறித்த ஒரு மரபு சார்ந்த விலாவாரியான விசாரிப்பும் தமிழ் இலக்கியத்தளத்தில் அவசியம் பேசப்பட வேண்டிய ஒன்று என்று நினைத்தாரா... தெரியவில்லை.

தெரிந்தே அரங்கேறவிருக்கும் ஆபத்துக்களை தவிர்க்கும் கடமையை முன்னிட்டு தற்கால அரசாங்கம் ஜல்லிக்கட்டு விளையாட்டை பல பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இருந்தும் ஆங்காங்கே பெருங்காயங்களும் உயிரிழப்பும் நிகழ்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன. வலிய வரும் ஆபத்தை நேருக்கு நேராக ஒருவித தைரியத்துடன் எதிர்கொள்ளும் இளைஞர்களின் மனநிலை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. குண்டுகளை எதிர்பார்த்து சண்டைக்குச் செல்லும் போர்வீரனின் மனநிலையை ஒத்தது அது. ஆனால் விளையாட்டு என்றாலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற நிதர்சனமான உண்மையோடு மரணம் நிகழும் சாத்தியத்தைத் தரும் களம் ஒன்றை வெறும் விளையாட்டு மைதானமாக மட்டும் பார்ப்பதில் காளை அடக்குபவன் போர் வீரனில் இருந்து பெருமளவில் வேறுபடுகிறான். சாகப்போகிறவனும் சாகடிப்பவனும் ஒரே மனநிலையில் எதிர் துருவங்களில் நின்று சண்டையிடும்போது காணக்கிடைக்கும் உளவியலும் தான் வெறும் ஒரு விளையாட்டுப் பொருள்தான்; தான் அடக்கப்படுவதும் கூட வெறும் விளையாட்டுதான்  என்ற உண்மையை அறியாமல் தன்னை அடக்க வருபவனை பரம எதிரியாகக் கருதி அவனைக் கொல்லும் அளவுக்கு ஒரு காளை வெறிகொள்ளும்போது காணக்கிடைக்கும் உளவியலும் தத்தம் செயல்தளங்களில் முற்றிலும் மாறுபட்டவை. அந்தப் பகுத்தறிவு காளைக்கு இல்லாமல் இருப்பதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டின் கருமையம். அது இருந்திருந்தால் காளையும் காளையை அடக்குபவனும் வெறும் பல்லாங்குழிதான் விளையாட வேண்டியிருக்கும். 

“வாடிவாசல்” காளையை அடக்கும் வெறும் கதையல்ல. காளைகளை அடக்குவதன் மூலம் சிலர் தமது வீரத்தையும் தைரியத்தையும் தெரியப்படுத்தும் நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல அது. சமதளத்தில் நின்று சமர் புரியும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தின் வெவ்வேறு துருவங்களைச் சேர்ந்தவர்கள் வாய்பேச முடியாத பகுத்தறிவு இல்லாத காளைகளை பகடையாக்கி தத்தம் வெறியைத் தணித்துக்கொள்ளும் இடமாகத்தான் “வாடிவாசல்” புரியப்படுகிறது. இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள், விவரிப்புகள், மண் வாசனை தவறாத கிராமிய வழக்குகள், அந்தப் பகுதியில் வாழ்ந்தாலன்றி புரியாத சில சொற்றொடர்கள் யாவும் எழுத்துப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான இலக்கிய ஆர்வத்தை கிளற வல்லமை படைத்தவையே. எனினும் இவை மூலம் செல்லப்பா முன் நிறுத்தும் சமூகம் தொடர்பான புரிதல் இதனினும் மேம்பட்டது. முக்கியமாக ஒரு காட்சியை நான் குறிப்பிடவேண்டும். பெரியபட்டி ஜமீனின் காரிக்காளையை பிச்சி அணைவது மிகவும் ஆபத்தானது என்று கிழவன் ஒருவன் பிச்சியை எச்சரிக்கை செய்யும்போது இன்னொருவன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஏதோ ஜமீன்தார் காளை எதற்கு வம்பு என்று ஒதுங்கிப்போகிறார்களே தவிர பயம் எல்லாம் ஒன்றும் இல்லை என்கிறான். காளையின் தகுதியும் அதன் பலம் குறித்த சந்தேகமும் பெரும்பாலும் அது வளரும் இடம் மற்றும் அது எவ்விதம் சந்தைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது என்பதை சூசகமாக சொல்லியிருப்பார் செல்லப்பா. சமூக அந்தஸ்தில் உயர்வான இடத்தில் இருக்கும் சாதாரண விஷயங்களும் அசாதாரணமான முறையில் இனங்காணப்படுகின்றன. அந்தக் காரிக்காளையைப் பற்றி ஜமீன்தாரே பெரு மதிப்பு வைத்திருக்கிறார். அது அடக்க முடியாத ஒன்று என்பதில் அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. தான் அதனை அடக்க விரும்பும் மனக்கிடக்கையை பிச்சி அவரிடம் அடக்கமாகச் சொல்லும்போது அவருடைய தற்செருக்கு லேசாகக் காயம் அடைகிறது. இதை எப்படியடா உன்னால் அடக்க முடியும் அது நந்தியின் அவதாரமடா என்று தனக்குத் தானே எண்ணிக்கொண்டு தேற்றிக்கொள்கிறார். இருந்தும் இவன் அடக்கிவிடுவானோ என்ற பயத்தை தன்னுடைய செய்கைகளின் மூலமும் பேச்சின் மூலமும் தன்னையுமறியாமலேயே அவ்வப்போது வெளிப்படுத்துவதை காணும் போது தான் வளர்ப்பது அடக்கமுடியாத காளையொன்றும் இல்லை; அது அடக்கப்பட்டால் அடக்கப்படுவது காளையல்ல; தானும், காளையைச் சொல்லி தன்னோடு சேர்ந்து வளர்ந்து விட்ட பெயரும்தான் என்பதை அவர் அறிந்துதான் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. இந்தப்பயம் பிச்சியின் கைவலிமையைப் பார்க்கும்போது உறுதிப்படுகிறது. ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் ஜல்லிக்கட்டு மைதானம் என்ற தளம் ஒன்றில் தனது அதிகாரம் செல்லுபடியாகாது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை ஒரு மகாமோசமானவராக செல்லப்பா சித்தரிக்கவில்லை என்பது ஓர் ஆறுதலான விஷயம். இது போன்ற சூழ்நிலைகளில் தங்களது கவுரவத்தின் பிரதிநிகளாக களத்தில் நிற்கும் காளைகளை அடக்க நினைப்பதே தவறு; அதை செய்ய முயல்பவனை எப்படியாவது அகற்றவேண்டும் என்ற மட்டமான புத்தி கொண்டவராக ஜமீன்தார் சித்தரிக்கப்படாதது வீரம் செறிந்த கலாச்சாரம் ஒன்று இன்னும் கலப்படம் இல்லாமல்தான் கிராமப்புறங்களில் இன்றும் அரங்கேறி வருகிறது என்ற உண்மையை செல்லப்பா கூற எத்தனிப்பது தெரியும்.    

இந்தக் காளையை அடக்குவது மகா சிரமமான காரியம்; முடியாத ஒன்று; யோசித்து அம்முயற்சியை கைவிடுமாறு பிச்சி அறிவுறுத்தப்படும்போது ‘அததுக்கு ஆளில்லாமலா இருப்பான்’ என்று சத்தம் வெளியே கேட்காதவாறு முனகிக்கொள்கிறான். அந்தக் காளையை தான் அடக்கப்போகிறேன் என்று மார்தட்டி அவனால் வெளியே கொக்கரிக்க முடியாத இடத்தில் அவன் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை.
மேலும் காளையின் செய்கைகள் வர்ணிக்கப்படும் இடங்களில் அது சாதாரண மிருகப்பிறவிக்குணம் படைத்த காளையல்ல; மனிதனின் சாதுரியம் நிறைந்த காளை என்று காட்டப்படுகிறது. அவிழ்த்து விட்டவுடன் தறிகெட்டு ஓடி கண்ணில் கண்டவர்களை எல்லாம் குத்திக் கிழிக்கும் காளையாக அது காட்சி தரவில்லை. தன்னை நோக்கி வருபவர்களை மட்டுமே அது நோக்குகிறது. யாரும் அதை நெருங்காவிட்டால் அது யாரையும் நெருங்கப் பிரியப்படாமல் அப்படியே நிற்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் இந்த மாதிரியான காளைகளை ‘நின்னுகுத்தி’ காளை என்பார்கள். மிகச் சிறந்த நின்னுகுத்தி காளையாக அது காட்டப்படுகிறது. இத்தனை புத்திசாலித்தனமாகக் காட்டப்படும் காளை தான் அடக்கப்பட்டவுடன் தனக்குள் அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் மிருகக்குணத்தைக் வெளிக்காட்டுகிறது. வெறிகொண்டு பாய்ந்து பத்து பேரை குத்திக்கொல்கிறது. பின் ஆற்றங்கரைக்குச் சென்று அவமானப்படுத்தப்பட்ட குழந்தை தண்ணீர் தொட்டிக்கு முன்பாக நின்றுகொண்டு தன் உருவத்தைப் பார்த்து தானே குமுறி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துவதுபோல ஆற்று மணலை தன் மீது அள்ளீவீசிக்கொண்டு நிற்கிறது (செறுக்கடித்துக்கொண்டு நிற்கிறது என்பது வட்டார மொழி)

செல்லப்பா முன் வைக்கும் இந்த மாறுபட்ட காளைக்குணம் விவாதத்துக்குரியது. எங்கிருந்து இந்த மாதிரியான குணத்தைப் பெற்றது அந்தக் காளை? மற்ற காளைகள் பிடிபட்டவுடன் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் ஓடோடி மறைந்து விடுவதாகக் கூறும் செல்லப்பா இந்தக் காளை மட்டும் கெட்ட பெயர் வந்து விடும் என்று அஞ்சும் ஒரு மனிதன் தொடக்கத்தில் தான் நல்லவன் போல் நடிப்பதையும் அந்த நடிப்பு தான் எதிர்பார்த்த விளைவைத் தராவிட்டால் தான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை கூசாமல் வெளிப்படுத்தும் விதத்தையும் கற்றுக்கொண்டதைப்போல் நடந்து கொள்ளும் மர்மம் என்ன என்பதைக் கேட்காமல் கேட்கிறார்? காளை அடக்கப்பட்டவுடன் காளையின் சொந்தக்காரன் எப்படி தனது மானம் போய்விட்டதாக எண்ணி மருகுவானோ அதை காளையின் செய்கைகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார் செல்லப்பா. ஆங்கிலத்தில் இலக்கிய விவாதங்களில் பயன்படும் “Objective Correlation” என்ற கருதுகோளை ஒத்தது இது. காளையால் அப்படி செய்ய முடிகிறது. ஆனால் இங்கிதம் கருதியோ சமய சந்தர்ப்பம் கருதியோ சம்பந்தப்பட்ட மனிதன் எல்லோருக்கும் முன்பு செய்ய முடியாமல் நிற்பதை அவர் குறியீடாகக் காட்டுகிறார். தனது துப்பாக்கியால் அதனை சுட்டுக் கொல்வதன் மூலம் காளையை உள்ளே அரித்துக்கொண்டு இருக்கும் அவமானம் தன்னையும் அரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் ஜமீன்தார். இறுதியில் ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இந்தக் கதை நிறைவடைகிறது. “மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு”. இந்த வாக்கியம் அவமானம் என்ற வார்த்தை இருசாரார் தொடர்பான சமூகத்தை உணர்வு ரீதியாக எவ்விதம் பாதித்து இருக்கிறது என்பதையும் அது மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அறிவின் எல்லையை எந்த அளவுக்கு குறுக்கி ஒரு புள்ளியில் சமரசம் செய்ய வைத்திருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்தி செல்கிறது. நாவலின் அடிநாதம் இதுதான் என்று நான் கருதுகிறேன். மனிதன்தான் மிருகம்; மிருகம்தான் மனிதன்.   
மூன்று தவ்வலுக்கு தாக்கு பிடித்தாலே காளையை அடக்கி விட்டதாக அர்த்தம் என்னும் போது பிச்சி அதையும் தாண்டி அதன் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் தங்கத்தைப் பெற காளையை உண்மையிலேயே அடக்க நினைக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். அவனுடைய தந்தை இறக்காமல் இருந்தால் பிச்சியின் இந்த வெற்றியே அவனுக்குப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அவனுடைய தந்தையின் இறப்பு குறித்து அவன் செய்யவேண்டியது தங்கத்தையும் தாண்டிய ஒன்றாக எனக்குப் படுகிறது. அது அந்தக் காளையின் மரணம். அதை அவனால் நேரடியாகச் செய்ய முடியாது. அதைச் செய்யத் தூண்டும் அளவுக்கு அந்தக் காளையின் சொந்தக்காரரின் செருக்கு குறுக்கொடிக்கப்பட வேண்டும்; அதை மட்டும்தான் அவனால் செய்ய முடியும். அவன் அதை திறம்படச் செய்கிறான். அதன் மூலம் அவன் தந்தை ஆத்மா சாந்தியடைவதாக நினைக்கிறான். அவனுடைய பழிவாங்கும் வெறியும் ஓரளவு தணிகிறது. காளை அவனுடைய நேரடி எதிரியானாலும் உண்மையில் அவன் கொல்ல நினைப்பது ஜமீன்தாரின் செல்வாக்கை. அவன் அதை செய்து முடிக்கிறான்.

கலாச்சார படிமங்களை நாசூக்காக சொல்வதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்று இருந்தாலும் “வாடிவாசல்” புரிந்துகொள்ள முயலும் சமூகப் பிரச்சினைகளின் பரிமாணம் இன்றைய தமிழ் இலக்கிய சமுதாயம் புறக்கணிக்க முடியாத ஒன்று. இன்று அலங்காநல்லூரிலும் அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்த சமூக அவலத்தை பின்புலமாகக் கொண்டு இயங்குபவை என்று நான் சொல்ல நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதும் இல்லை. “வாடிவாசலின்” பின்னணியும் அது அறைகூவல் விடுக்கும் சில கேள்விகளும் அந்தந்த தளங்களில் புரிந்துகொள்ளப்படவேண்டும். சில நேரங்களில் அது தற்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சம் அது தற்செயலான ஒன்றாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.


சரவணன். கா