Sunday, 4 December 2011

சோர்வு தெரியாத தூரம்

சாவை நோக்கித் தினம் தினம்
தேய்வது காலடிச்சுவடுகளாக இருந்தாலும்
விடியலில் காத்திருக்கும்-
புதைந்த நம்பிக்கை
புகைப்படலமாக படரும்
உயிர்ப்பின் ரகசியம்.

அகல நீளம் அறியாத
வாழ்க்கைப் பாதையில்
அடுத்த கட்டம் என்னவென்று தெரியாத
குருட்டுப்பயணம்

இருந்தும் இல்லாமலுமான
உறவுமுடிச்சுப் பின்னலின்
புரியாத தொடக்கம்
அறிவுக்கெட்டாத முடிவுப்புள்ளி.

பொருளே எட்டாத
வாடிவதங்கும் மலராக
இளமையில் ஆடி
முதுமையில் வாடும்
அந்திமத்தில் அடங்கிப்போகும்
ஆசையொழியாத என் மூச்சு.

தெரிந்துதான் பயணிக்கிறேனா?
அப்படித்தான் தோன்றுகிறது.

அர்த்தம் தேடியே
அடங்கவேண்டியவனா நான்?
தெரியாத ஒன்றை தெரிவதில்தானே
என் தெளிதல் ஒளிந்திருக்கிறது.

என் தெளிவு.....

தினம் தினம் பார்க்கும்
அறிமுகம் இல்லாத மனிதர்கள்...

பார்த்தபின்னும் தெரிந்து கொள்ள
அவசியம் இல்லாத மனிதர்கள்...

என் வரவை அறிந்தோ அறியாமலோ
எங்கோ கத்திக்கொண்டிருக்கும் குருவிகள்...

தினமும் பார்த்தாலும் அகால வேளையில் வரும்போது
என்னைப்பார்த்துக் குரைத்து அடங்கும் தெரு நாய்...

சம்பந்தமே இல்லாமல்
ஒரு வார்த்தை கூட பேசாமல்
கண்ஜாடைகூட காட்டாமல்
ரயிலிலும், பஸ்ஸிலும்
பயணத்தை சுகமாக்கிச் செல்லும் இளம்பெண்கள்...

நாளை மரணம் என்பதைப் போல்
இன்றே முழுமையைத் தேடும்- என்
அவசரம்

களைப்படைய வைக்கும் என் நெடுந்தூரப் பயணம்
எனக்கு....
சுவாரஸியமாகவே இருக்கிறது.



சரவணன். கா


Please also visit  www.solitaryindian.blogspot.com to read my blogs in English.