பந்தயம் ((Tamil
Translation of Anton Chekhov’s THE BET)
அது இலையுதிர்காலத்தின் இருண்டு போன ஓர் இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஓர் இலையுதிர்
கால சாயங்காலப்பொழுதில் தான் கொடுத்த ஒரு விருந்தினை நினைத்தவாறே அந்த வட்டிக்கடைக்காரன்
தன்னுடைய படிக்கும் அறையில் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்.
அவ்விருந்தில் சில அறிவாளிகள் இருந்தனர்; சுவையான
விவாதமும் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. பல விவாதங்களுக்கு
மத்தியில் மரண தண்டனையைப்பற்றியும் அவர்கள் பேசலானார்கள். அங்கே வந்திருந்த
சில பத்திரிக்கையாளர்களையும் படித்த சிலரையும் தவிர விருந்தினர்களில்
பெரும்பாலானோர் மரண தண்டனையை மறுதலித்தார்கள். மரண தண்டனை என்பது
காலாவதியாய்ப்போன, கிறித்தவ நாடுகளுக்குப் பொருந்தாத,
கண்ணியமற்ற ஒன்றென்று அவர்கள் கருதினார்கள். அவர்களில்
சிலர் மரண தண்டனைக்குப்பதிலாக ஆயுள் தண்டனை தரப்படவேண்டும் என்றார்கள்.
'' இதனை நான் ஒத்துக்கொள்ள முடியாது'' என்று கூவினான் விருந்தைத்
தந்தவன். “நான் மரண தண்டனையையும் சோதித்துப் பார்த்ததில்லை;
ஆயுள் தண்டனையையும் சோதித்துப் பார்த்ததில்லை. ஆனால் எந்தவொரு முன் அனுபவமும் அவசியமில்லாமல் ஒருவன் தீர்மானிக்க வேண்டும்
என்னும்போது மரண தண்டனை ஆயுள் தண்டனையைக்காட்டிலும் கண்ணியமானது; மனிதாபிமானமிக்கது என்று சொல்வேன். மரண தண்டனை ஒருவனை
உடனடியாகக் கொல்லுகிறது; ஆனால் ஆயுள் பூராவுமான தண்டனை அணு அணுவாகக்
கொல்லுகிறது. எந்தக் கொலையாளி அதிக மனிதாபிமானமுள்ளவன்?
உங்களை சில நிமிடங்களில் கொல்பவனா அல்லது ஆயுள் முழுக்க இழுத்தடித்து
மெதுவாகக் கொல்பவனா?'' என்று கேட்டான் அவன்.
''இரண்டுமே கண்ணியமற்றவை. ஏனெனில் இரண்டுக்குமே ஒரே குறிக்கோள்தான்-
உயிரை எடுப்பது. நாடு என்பது கடவுள் அல்ல.
விரும்புகிற போது உயிர்ப்பிக்க முடியாத ஒன்றை எடுப்பதற்கு நாட்டுக்கு
உரிமை இல்லை'' என்று கருத்து தெரிவித்தான் வந்திருந்த விருந்தினர்களில்
ஒருவன்.
வந்திருந்த விருந்தினர்களில் இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க
வக்கீலும் ஒருவன். அவனிடம் அபிப்ராயம்
கேட்கப்பட்டபோது அவன் சொன்னான்:
"மரண தண்டனை ஆயுள் தண்டனை இரண்டுமே கண்ணியமற்றவைதான்; ஆனால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இந்த இரண்டில் ஒன்றை என்னைத் தேர்ந்தெடுக்கச்
சொன்னால் நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுப்பேன்; ஒன்றுமே இல்லையென்பதை
விட குறைந்த பட்சம் வாழ்வது என்பது சிறந்தது இல்லையா?"
ஓர் உயிர்ப்பான விவாதம் அரங்ககேறத் தொடங்கியது. அந்த நாட்களில் இளமையுடனும் அதற்கே உரிய படபடப்பும்
உடையவனாய் இருந்த வட்டிக்கடைக்காரன் திடீரென்று இதைக்கேட்டு உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டான்;
அருகே இருந்த மேசையின் மீது தன் முஷ்டியால் ஓங்கிக் குத்தி அந்த இளம்
வக்கீலைப் பார்த்து கத்தினான்:
''அது உண்மையாக இருக்க முடியாது. நான் இரண்டு மில்லியன்
டாலர்கள் பந்தயம் கட்டுகிறேன். உன்னால் ஐந்து வருடங்கள் கூட தனிமையில்
அடைப்பட்டு இருக்க முடியாது"
"இதை நீ உண்மையிலேயே நேர்மையாகச் சொன்னால் இந்தப் பந்தயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்;
ஆனால் ஐந்து வருடங்களுக்கு அல்ல; பதினைந்து வருடங்களுக்கு"
என்றான் அந்த இளம் வக்கீல்.
"பதினைந்தா!! ஒத்துக்கொள்கிறேன்" என்றலறினான் வட்டிக்கடைக்காரன். "கனவான்களே!
இதோ இரண்டு மில்லியன் டாலர்களை பணயமாகக் கட்டுகிறேன்”
“நானும் ஒத்துக்கொள்கிறேன். நீ உனது மில்லியன்களைப் பணயம்
வைக்கிறாய். நான் என் சுதந்திரத்தைப் பணயம் வைக்கிறேன்"
என்றான் அந்த இளைஞன்.
இவ்வாறாக அந்த முட்டாள்தனமான காட்டுமிராண்டிப் பந்தயம் செயலாக்கம்
பெற்றது. எண்ண இயலாத அளவுக்கு இருந்த மில்லியன்களால்
ஏற்கனவே சீரழிந்தும் ஊதாரியாகவும் ஆகிப்போயிருந்த வட்டிக்கடைக்காரன்
இந்தப் பந்தயத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இரவு உணவின்
போது அவன் இளம் வக்கீலைப் பார்த்துக் கிண்டல் செய்து பேசினான்;
"இன்னும் நன்றாகச் சிந்தித்துப் பார் இளம் காளையே! இன்னும்
உனக்குக் கால அவகாசம் இருக்கிறது. இரண்டு மில்லியன்கள் என்பது
எனக்கு ஒன்றுமே இல்லாத தொகை. ஆனால் நீ உன் வாழ்வின் மிகச் சிறந்த
மூன்று அல்லது நான்கு வருடங்களை இழக்கப்போகிறாய். மூன்று அல்லது
நான்கு வருடங்கள் என்று நான் சொல்லக் காரணம் அதற்கு மேல் நீ உயிரோடு இருக்கப்போவதில்லை
என்பதுதான். மகிழ்ச்சியழிந்து போன மனிதா! இன்னொன்றையும் மறந்து விடாதே! வற்புறுத்தலின் பேரில்
அடைபட்டு கிடப்பதை விட தானாக முன் வந்து அடைபட்டு கிடப்பதை பொறுத்துக் கொள்வதென்பது
மிகவும் கடினமான காரியம். எந்த நேரத்திலும் சுதந்திரமாக நான்
வெளியே செல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்ற எண்ணமே சிறையில் அடைபட்டு வாடும் உன் மொத்த
வாழ்நாட்களை விஷமாக்கிவிடும். உனக்காக நான் வருந்துகிறேன்"
இதையெல்லாம் நினைத்தபடி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த
வட்டிக்கடைக்காரன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்;
'' அந்தப் பந்தயத்தின் குறிக்கோள்தான் என்ன? அந்த
மனிதன் தன் வாழ்க்கையின் பதினைந்து வருடங்களை தொலைப்பதனாலும் நான் இரண்டு மில்லியன்
டாலர்களை தூக்கி எறிவதனாலும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? ஆயுள் தண்டனையைக் காட்டிலும் மரண தண்டனை சிறந்தது என்பதை அது நிரூபித்து விடுமா
என்ன? இல்லை..இல்லை. இவை எல்லாம் அறிவுக்குப் புறம்பானவை; அர்த்தமற்றவை.
என்னைப் பொறுத்தவரை அது கவலையறியாத ஒரு மனிதனின் மனோவியாதி ;
அவனைப் பொறுத்த வரை பணத்தின் மீதான வெறும் பேராசை...'
அந்த மாலைப்பொழுதில் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும்
அவன் நினைத்துப்பார்த்தான். வட்டிக்கடைக்காரனின்
தோட்டத்தில் அவனுக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் அந்த இளம் வக்கீல் தன்னுடைய அஞ்ஞாத
சிறை வாழ்க்கை வருடங்களை இறுக்கமான கண்காணிப்பில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம்
செய்யப்பட்டது. மேலும் பதினைந்து வருடங்களில் மனிதர்களைப் பார்க்க
வேண்டியோ, மனிதக்குரலைக் கேட்க வேண்டியோ, கடிதங்களை, செய்தித்தாள்களைப் பெற வேண்டியோ விடுதியின்
வாசலைத் தாண்டி வர அந்த வக்கீலுக்குச் சுதந்திரம் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்கள் வைத்துக்கொள்ளவும், கடிதங்கள் எழுதவும், மது அருந்தவும், புகைப்பிடிக்கவும் அவன் அனுமதிக்கப்பட்டான். ஒப்பந்தத்தின்படி,
இவற்றிற்காகவே பிரத்தியேகமான சிறு சன்னல் ஒன்று செய்யப்பட்டு அதன் மூலமாக
அவனுடைய வெளி உலகுடனான ஒரே தொடர்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அவனுக்குப்
பிரியமான எதையும் அவன் பெறலாம்- புத்தகங்கள், இசை, மது இத்யாதி... எந்த அளவினதாக
இருந்தாலும் சரி...எழுதிக்கேட்பதன் மூலம் அவனுக்குக் கிடைக்கும்...ஆனால் அந்தச் சிறிய சன்னலின் வழியே மட்டும்தான். அவனுடைய
சிறைவாசம் முற்றிலும் தனிமையானது என்பதை உறுதி செய்யும் வகையில் அந்த ஒப்பந்தம் எல்லா விரிவான சிறிதான தகவல்களையும் தந்திருந்தது. அந்த இளைஞன் முழுமையாகப் பதினைந்து வருடங்களைக் கழிக்க வேண்டும்...அதாவது நவம்பர் 14,1870 பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி
நவம்பர் 14, 1885 பன்னிரண்டு மணி வரையில்... ஒப்பந்தத்தில் இருந்து ஏதேனும் ஒரு சிறு மீறல்...அதாவது
காலக்கெடு முடிய இரண்டு நிமிடங்கள் இருக்கும் பட்சத்தில் செய்யப்படும் மீறல் கூட வட்டிக்கடைக்காரனை
இரண்டு மில்லியன் டாலர் பணம் தந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து விடுவித்து விடும்.
அவனுடைய முதல் வருட சிறைவாசத்தில் அந்தக்கைதி கடுமையான தனிமையாலும்
மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தான் என்பதை அவன் எழுதிய குறுங்குறிப்புகளிலிருந்து
ஒருவரால் அனுமானம் செய்ய முடிந்தது. அவன்
தங்கி இருந்த விடுதியில் இருந்து பியானோவின் இசையை இரவு பகலாகக் கேட்க முடிந்தது.
மதுவையும் புகையிலையையும் அவன் மறுத்து விட்டான். மது ஆசைகளைத் தூண்டிவிடுகிறது; ஆசைகள் ஒரு சிறைவாசியின்
மிக மோசமான எதிரி என்று அவன் எழுதியிருந்தான். அது தவிர,
தனிமையில் நல்ல மதுவைக் குடிப்பதைப் போன்ற பயங்கரமான ஒன்று எதுவும் இல்லை
எனவும் கூறியிருந்தான். மேலும், புகையிலை
அறையின் காற்றை அசுத்தப்படுத்திவிடுகிறது. முதல் வருடத்தில் அனுப்பப்பட்ட
புத்தகங்கள் லேசான கருத்துக்களை பிரதானப்படுத்தியவையாகவும், புதினங்கள்
சிக்கலான காதல் கதைக்களங்களை உடையனவாகவும், பிற கதைகள்
துப்பறியும் கதைகளாகவும், கற்பனைக்கதைகளாகவும் மற்றும் இன்ன பிறவானவையாகவும்
இருந்தன.
இரண்டாம் வருடத்தில் விடுதியில் பியானோ இசை கேட்கவில்லை. இந்த முறை கைதி இலக்கியங்களைக் கேட்கலானான்.
ஐந்தாம் வருடத்தில் இசை மீண்டும் கேட்டது; கைதி
மீண்டும் மதுவைக் கோரினான். இத்தனை வருடங்களாக அந்த வக்கீல் சாப்பிடுவது,
குடிப்பது, படுக்கையில் விழுந்து கிடப்பது,
அடிக்கடி கொட்டாவி விடுவது, கோபத்துடன் தனக்குள்ளே
பேசிக் கொள்வதையல்லாமல் வேறொன்றையும் செய்யவில்லை
என்று அவனை சன்னலின் வழியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அவன்
புத்தகங்கள் படிப்பதில்லை. சிலசமயம் இரவு நேரங்களில் எழுதுவதற்காக
உட்காருவான்; அப்படியே எழுதுவதில் பல மணி நேரங்களைச் செலவிடுவான்.
காலையில் தான் எழுதியவை எல்லாவற்றையும் கிழித்தெறிவான். ஒரு தடவைக்கு மேலாக அவன் அழுத சத்தம் கூட கேட்டதுண்டு.
ஆறாவது வருடத்தின் பின்பாதியில் அந்தக் கைதி மொழிகளையும், தத்துவத்தையும், வரலாற்றையும்
அதீத ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தான். இவைகளைக் கற்பதில் தன்னை
முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். அவன் வேண்டிய புத்தகங்களை வாங்கித்தரவே
வட்டிக்கடைக்காரனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. கைதியின்
வேண்டுதலின் பேரில் நான்கு வருடங்களில் அறுநூறு கனமான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில்தான் வட்டிக்கடைக்காரன் தன்னுடைய கைதியிடம் இருந்து
கீழ்க்கண்ட கடிதத்தைப் பெற்றான்:
''பிரியமான ஜெயிலர்! இந்த வரிகளை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன்.
அம்மொழிகளை அறிந்தவர்களிடம் போய் இதனைக் காண்பி. அவர்கள் இதனைப் படிக்கட்டும். இதில் அவர்கள் ஒரு பிழையையேனும்
கண்டால் தோட்டத்திற்குள் துப்பாக்கிக்குண்டால் ஒரே ஒரு முறை சுடுமாறு உன்னை வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் சுடுவது என்னுடைய முயற்சிகள் வீண்
போகவில்லை என்பதைக் காட்டட்டும். எந்த நாட்டிலும் எந்தக் காலக்கட்டத்திலும்
வாழ்ந்த அறிவுஜீவிகள் பலதரப்பட்ட மொழிகளைப் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரே மாதிரியான சுடர்தான் அவர்களுக்குள்ளே எரிகிறது. ஓ!! அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற என்னுடைய தெய்வீக
சந்தோசம் உனக்குத் தெரிந்தால்”. கைதியின் ஆசை நிறைவேறியது; தோட்டத்தில் இரண்டு குண்டுகளை சுடுமாறு வட்டிக்கடைக்காரன் ஆணையிட்டான்.
பத்தாவது வருடத்திற்குப் பின் மேசையின் மீது அசையாமல் உட்கார்ந்திருந்து
புதிய ஏற்பாட்டைத் தவிர அவன் வேறொன்றையும் படிக்கவில்லை. நான்கு வருடங்களில் அறுநூறு கற்றறியும்
கனமான நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவன் புரிந்துகொள்வதற்கு எளிதான மெல்லிய
புத்தகம் ஒன்றின் பால் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காலவிரயம் செய்துகொண்டிருந்தது வட்டிக்கடைக்காரனுக்குப்
புரியாத புதிராகத் தோன்றியது. இறையியலும், மதங்களின் வரலாற்றைப் பற்றிய புத்தகங்களும் புதிய ஏற்பாட்டைத் தொடர்ந்தன.
அவனுடைய கடைசி இரண்டு வருட சிறைவாசத்தின் போது அந்தக் கைதி மிக
அதிக அளவிலான புத்தகங்களை எந்தவித பாரபட்சமும் இன்றி படிக்கலானான். சில சமயங்களில் இயற்கை அறிவியலில் மூழ்கியிருப்பான்;
பின் பைரனையும் ஷேக்ஸ்பியரையும் கேட்பான். ஒரே
சமயத்தில் பௌதீக சம்பந்தமான புத்தகங்கள், ஒரு மருத்துவக் குறிப்பேடு,
ஒரு புதினம் மற்றும் தத்துவம் அல்லது இறையியல் மீதான ஆய்வுக்கட்டுரைகள்
போன்றவற்றைக் கோருவதற்காக அவன் எழுதியிருந்த தாள்கள் வந்தன. அவன் படித்தது கப்பலின்
உடைபாடுகளுக்கு மத்தியில் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் ஒரு
மனிதன் தப்பிப் பிழைப்பதற்காகக் கையில் கிடைத்த பாய்மரக்கழிகளை ஒன்றன் பின் ஒன்றாக
பேராசையுடன் கவ்விப்பிடிப்பதை ஒத்திருந்தது.
* *
* * *
*
வட்டிக்கடைக்காரன் இதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு நினைத்துப்
பார்த்தான்:
''நாளை பன்னிரண்டு மணிக்கு அவன் தனது சுதந்திரத்தைத் திரும்பப்பெற்றுவிடுவான்;
எங்களுடைய ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுக்க
வேண்டும்; அப்படி நான் கொடுத்தால் என்னளவில் எல்லாம் தீர்ந்து
விடும்; நான் முற்றிலும் சீரழிந்துவிடுவேன்"
பதினைந்து வருடங்களுக்கு முன்பு மில்லியன்
டாலர்கள் என்பது அவன் எண்ணிப்பார்க்க அவசியமற்றவைகளாக இருந்தன. ஆனால் இப்போது தன் கடன்கள் பெரிதா அல்லது சொத்துக்கள் பெரிதா என்று தன்னைக்
கேள்வி கேட்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. பங்குச்சந்தையில்
பணச்சூதாட்டம், கண்மூடித்தனமான யூகம் மற்றும் அவனுடைய அந்திமக்காலங்களில்
கூட அவனால் வெளிவர முடியாத ஊதாரித்தனம் எல்லாம் சேர்ந்து
அவனது மொத்தச் சொத்துக்களையும் படிப்படியாக அழிவின் விளிம்புக்கு
கொண்டு வந்திருந்தது. தலைக்கனமுள்ளவனாகவும், பயமில்லாதவனாகவும்,
தன்னம்பிக்கையுடையவனாகவும் இருந்த கோடீஸ்வரன் தன் முதலீட்டில் நிகழும்
சிறு ஏற்றத் தாழ்வைக்கூட கண்டு நடுங்கும் சராசரி வட்டிக்கடைக்காரனாக அவன் மாறிப்போயிருந்தான்.
"வீணாய்ப்போன பந்தயம். அந்த மனிதன் ஏன் இன்னும் செத்துத்
தொலைக்கவில்லை?" என்று விரக்தியில் தன் தலையை இறுகப்பிடித்துக்கொண்டு
தனக்குள்ளே முனகிக்கொண்டான். ''அவனுக்கு இப்போதுதான் நாற்பது
வயதாகிறது; என்னிடமிருக்கும் கடைசி பைசாவையும் அவன் பிடுங்கிக்கொள்வான்;
திருமணம் செய்து கொள்வான்; வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பான்;
பங்குச்சந்தையில் சூதாடுவான்; நான் அவனைப் பொறாமையுடன்
ஒரு பிச்சைக்காரனைப் போல பார்க்கும்போது தினம் தினம் அவனிடமிருந்து ஒரே வாக்கியத்தை
நான் கேட்கவேண்டியிருக்கும்: எனக்குக் கிடைத்த இந்த சந்தோசமான
வாழ்க்கைக்கு நான் உனக்குக் கடமைப்பட்டுள்ளேன். உனக்கு நான் எதாவது
உதவுகிறேன்" ......" இல்லை...இது மிகவும் அதிகம். நான் கடனாளியாவதிலிருந்தும் அவமானத்திலிருந்தும்
தப்புவதற்கு ஒரே வழி அந்த மனிதன் சாக வேண்டும்"
மணி மூன்று அடித்ததை வட்டிக்கடைக்காரன் கவனித்தான். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
குளிர்ந்து போயிருந்த மரங்களின் சலசலப்பைத் தவிர வேறு எந்தச் சத்தத்தையும்
வெளியிலிருந்து கேட்கமுடியவில்லை. எந்தச் சத்ததையும் எழுப்ப முயலாமல்
அலமாரியிலிருந்த பதினைந்து வருடங்களாகத் திறக்கப்படாமல் இருக்கும் அந்த விடுதியின் சாவியை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான்
வட்டிக்கடைக்காரன்.
தோட்டத்தில் இருட்டாகவும் குளிராகவும் இருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது. புழுக்கமான பனியைக் கிழித்தோடும் காற்று அந்தத் தோட்டத்தில் அலறியபடி வீசிக்கொண்டு
இருந்தது. அங்கிருந்த மரங்களை ஓய்வெடுக்க விடாமல் செய்துகொண்டிருந்தது. வட்டிககடைக்காரன் தன் கண்களை இறுக்கிச் சீர் படுத்தி பார்க்க முயன்ற பின்பும்
அவனால் நிலத்தையோ, வெண் சிலைகளையோ, விடுதியையோ
மரங்களையோ பார்க்கமுடியவில்லை. விடுதி இருந்த இடத்தை அடைந்து
இரண்டு முறை காவலாளியை அழைத்துப்பார்த்தான். எந்தப் பதிலும் வரவில்லை.
அனேகமாக காவல்காரன் குளிரிலிருந்து தப்ப எங்காவது தஞ்சம் புகுந்திருப்பான்.
சமையலறையிலோ செடிப்பாத்திகள் உள்ள இடத்திலோ நன்றாகத் தூங்கிக்கொண்டிருப்பான்.
'' நான் நினைத்ததை நடத்தி முடித்து விட்டால் காவல்காரனின் மீதுதான் முதலில் சந்தேகம்
வரும்" என்று எண்ணினான் வட்டிக்கடைக்காரன்.
இருட்டில் வாசல்படிகளையும் வாசலையும் உணர்ந்த படி விடுதியின்
நுழைவாயிலுக்குள் சென்றான். அங்கிருந்த
சிறு பாதை ஒன்றை தட்டித் தடவியபடி தீக்குச்சி ஒன்றைப் பற்ற வைத்தான். அங்கே ஒரு பிராணியும் இல்லை. கட்டிலொன்று காணப்பட்டது.
ஆனால் அதன் மேல் படுக்கை ஏதும் இல்லை. மூலையில்
ஒரு தகரத்தாலான 'ஸ்டவ்' ஒன்று இருந்தது.
கைதியின் அறைக்கு இட்டுச்செல்லும் கதவின் மேல் முத்திரை உருக்குலையாமல்
அப்படியே இருந்தது.
தீக்குச்சி அணைந்தபோது நடுக்கத்துடன் கிழவன் அந்தச் சிறுசன்னலின்
வழியே எட்டிப்பார்த்தான். கைதியின் அறையில்
ஒரு மெழுகுவர்த்தி மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அவன் மேசையின்
மீது அமர்ந்திருந்தான். அவனுடைய முதுகு, தலையிலிருந்த முடி மற்றும் கைககளைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. திறந்திருந்த புத்தகங்கள் மேசையின் மீதும், இரண்டு ஈஸி
சேர்களின் மீதும், மேசையின் அருகிலிருந்த கம்பள விரிப்பின் மீதும்
பரவிக் கிடந்தன.
ஐந்து நிமிடங்கள் கடந்தன. கைதியிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லை. பதினைந்து வருடச்
சிறைவாசம் அசையாமல் உட்கார்ந்திருக்க அவனுக்குக் கற்றுத் தந்திருந்தது. வட்டிக்கடைக்காரன் விரல்களால்
கதவைத் தட்டினான். பதிலுக்கு அந்தக் கைதி எந்தவொரு அசைவையும்
காட்டவில்லை. பிறகு கதவின் முத்திரைகளை வட்டிக்கடைக்காரன் எச்சரிக்கையாக
உடைத்து பூட்டின் சாவித்துளைக்குள் சாவியைக் கவனமாகச் செருகினான். துருப்பிடித்த பூட்டு கரகரப்பான சத்ததை உண்டுபண்ணியது; கதவு க்ரீக்க்க் சத்ததுடன் திறந்து கொண்டது. வட்டிக்கடைக்காரன்
காலடிச்சத்தங்களையும் ஆச்சரியம் நிறைந்த கூக்குரலையும் எதிர்பார்த்தான். ஆனால் மூன்று நிமிடங்கள் கழிந்தபின்பும் முன்பு நிலவிய அதே அமைதி அங்கே நிலவியது.
உள்ளே செல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டான்.....
மேசையில் சராசரி மனிதர்களைப் போல தோற்றமளிக்காத ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். தோல் எலும்போடு இறுக ஒட்டிப்போய், பெண்களுக்கு உள்ளதைப்போல நீண்டு சுருண்ட கூந்தலும் தாறுமாறாக
வளர்ந்திருந்த தாடியுமாக ஓர் எலும்புக்கூடாக அவன் காட்சியளித்தான். அவனுடைய முகம் மண்ணின் நிறமேற்று மஞ்சளாக மாறிப்போயிருந்தது. கன்னங்கள் குழி விழுந்து போயும், நெடியதுமாய் குறுகியதாகவும்
போயிருந்த முதுகும், அவனது பரட்டைத் தலையைத் தாங்கிக்கொண்டு இருந்த மெலிந்தும் மென்மையாகவும் ஆகியிருந்த கைகளும் பார்க்கும்போதே வேதனையைத்
தருவதாக இருந்தன. அவன். முடிகள் ஏற்கனவே நரைத்துப்போயிருந்தன.
வயோதிகம் தந்ததைப் போல் இருக்கும் அவனுடைய அசிங்கமான முகத்தைப் பார்ப்பவர்கள்
அவனுக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்று நம்ப மாட்டார்கள். கவிழ்ந்திருந்த
அவனுடைய தலைக்கு முன்னால் மேசையில் ஒரு வெள்ளைத்தாளும் அதில் மிகச்சிறிய கையெழுத்தில்
ஏதோ எழுதப்பட்டு இருந்தது.
''பரிதாபத்துக்குரியவன். நன்றாகத் தூங்கிக்கொண்டு இருக்கிறான்.
அனேகமாக மில்லியன் டாலர்களைப் பற்றிக் கனவு காண்கிறான் போலும்''
என்று வட்டிக்கடைக்காரன் நினைத்துக்கொண்டான். "ஏற்கனவே பாதியாய்ச் செத்துப்போன இவனைப் படுக்கையில் வீசி...சிறு தலையணை ஒன்றால் மூச்சை நிறுத்த லேசாக ஓர் அழுத்தம்...இது இயற்கையல்லாத மரணம் என்பதை கவனமாக மேற்கொள்ளப்படும் சோதனைகளால்
கூட கண்டுபிடிக்க முடியாது''.... இருப்பினும் இவன்
என்னதான் எழுதியுள்ளான் என்பதையும் படித்து விடுவோமே''
வட்டிக்கடைக்காரன் அந்தத் தாளை மேசையிலிருந்து எடுத்து கீழ்க்கண்டவற்றைப்
படிக்கலானான்:
"நாளை பன்னிரண்டு மணிக்கு நான் எனது சுதந்திரத்தையும் மற்ற மனிதர்களொடு உறவாடும்
உரிமையையும் மீண்டும் பெற்றுவிடுவேன்; ஆனால் இந்த அறையிலிருந்து
வெளியேறி சூரிய உதயத்தைப் பார்க்கும் முன் சில வார்த்தைகளை உனக்குச் சொல்ல வேண்டியது
அவசியம் என்று நினைக்கிறேன். தூய்மையான மன நிலையுடன் சொல்கிறேன்...என்னையாளும் இறைவனின் முன்பாக...இந்த விடுதலை,
இந்த வாழ்க்கை இந்த ஆரோக்கியம் மற்றும் உலகின் நல்ல விஷயங்கள் என்று
உன் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இன்ன பிற இத்யாதிகளையும் நான் வெறுக்கிறேன்...
''பதினைந்து வருடங்களாக நான் இந்த உலகின் லௌகீக வாழ்க்கையைப்பற்றி படித்து வருகிறேன்.
இந்த உலகத்தையும் மனிதர்களையும் நான் பார்க்கவில்லை என்பது உண்மை;
ஆனால் உன் புத்தகங்களின் மூலம் நான் நறுமணமிக்க மதுவைக் குடித்திருக்கிறேன்...
பாடல்களைப் பாடியிருக்கிறேன்...காடுகளில் மான்களையும்
காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடியிருக்கிறேன்... பெண்களைக் காதலித்திருக்கிறேன்..உன் கவிஞர்களாலும் அறிவுஜீவிகளாலும் மாயாஜாலத்தால் உருவகிக்கப்பட்ட நிரந்தர
மேகங்களையொத்த அழகான பெண்கள் என்னை இரவில் சந்தித்திருக்கிறார்கள்... என் மனதைச் சுழற்றியடித்த அருமையான கதைகளை என் காதுகளில் சொல்லியிருக்கிறார்கள்....உன் புத்தகங்களில் நான் எல்பர்ஸ் மற்றும் மௌண்ட் ப்ளாங்க் மலைச்சிகரங்களில்
ஏறியிருக்கிறேன்... அங்கேயிருந்தபடி சூரியோதயத்தைப் பார்த்திருக்கிறேன்...அது வானையும், நீலப்பெருங்கடலையும், மலைமுகடுகளையும் தன்னுடைய தங்கச் செந்நிறத்தால் வெள்ளமாக்கியதைக் கவனித்திருக்கிறேன்.
அங்கே இருந்து தலைக்கு மேல் புயல் மேகங்களைக் கிழிக்கும் மின்னல் ஒளிக்கீற்றைப்
பார்த்திருக்கிறேன்...பசுமையான் காடுகளையும், சமவெளிகளையும், ஆறுகளையும், ஏரிகளையும்,
நகரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்...சைரன்களின்
கீதத்தையும், மேய்ப்பாளர்களின் குழலிசையையும் நான் கேட்டிருக்கிறேன்...கீழே பறந்து என்னோடு பேச வந்த கடவுளின் அழகான பிசாசுகளின் இறகுகளை நான் தொட்டிருக்கிறேன்...உன் புத்தகங்களில் ஆழமே தெரியாத குழிக்குள் என்னை நான் வீசியிருக்கிறேன்,
ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கிறேன், கொலைபுரிந்திருக்கிறேன்,
நகரங்களை எரித்திருக்கிறேன், புதிய மதங்களைப் போதித்திருக்கிறேன்,
முழு அரசுகளைக் கைப்பற்றியிருக்கிறேன்...
''உன் புத்தகங்கள் எனக்கு ஞானத்தைத் தந்துள்ளன. காலங்காலமாக
ஓய்வில்லாத மனிதனின் எண்ணங்கள் உருவாக்கியவை யாவும் என் மூளைக்குள் ஒரு சிறிய அளவுகோளில்
சுருக்கப்பட்டுள்ளன. உங்கள் எல்லோரைக்காட்டிலும் நான் அறிவாளி
என்பது எனக்கு நன்றாகத் தெரியும்''
''உங்கள் புத்தகங்களை நான் வெறுக்கிறேன். இந்த ஞானமும்,
இந்த உலகத்தின் ஆசிர்வாதங்களும் எனக்குப் பிடிக்கவில்லை. அவை எல்லாம் கானல் நீரைப் போல மதிப்பே இல்லாதவை; சிறுமையானவை;
வெறும் மாயை; ஏமாற்றுத்தனமானவை; நீ கர்வமிக்கவனாக இருக்கலாம். அறிவுள்ளவனாக இருக்கலாம்.
நல்லவனாக இருக்கலாம்.ஆனால் சாவு என்ற ஒன்று உங்கள்
எல்லோரையும் பூமிக்குக் கீழே குழி தோண்டும் எலிக்ககூட்டங்களை விட நீங்கள் சிறந்தவர்
இல்லை என்பதைப் போல இந்தப்பூமியின் முகத்தினின்று அகற்றி விடும்...உன் சந்ததி, உன் வரலாறு, அழிவில்லாததாகக்
கருதப்படும் உன் அறிவுஜீவிகள் எல்லாமும் இந்தப் பூமிப்பந்துடன் சேர்ந்து எரிந்தோ உறைந்தோ
போய்விடும்''
''நீங்கள் பைத்தியங்கள். தவறான வழியில் சென்று
விட்டீர்கள். உண்மைக்குப்பதில் பொய்யைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.
அழகுக்குப்பதில் அசிங்கத்தைத் தேர்ந்துள்ளீர்கள். திடீரென்று
ஆப்பிளும் ஆரஞ்சும் பழங்களைத் தருவதற்குப் பதிலாக தவளைகளையும் பல்லிகளையும்
தந்தாலோ, ரோஜாப்பூக்கள் நறுமணத்திற்குப் பதிலாக குதிரையின் வியர்வை நாற்றத்தை தந்தாலோ
நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள். அதனால்தான் சொர்க்கத்திற்குப்
பதிலாக நர உலகைக் கேட்கும் உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களைப் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை''
''நீ எதற்காகவெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவைகளையெல்லாம் நான் வெறுக்கிறேன்
என்பதை நான் செயலில் காட்ட ,முன்பு நான் சொர்க்கமாக நினைத்த ஆனால்
தற்போது வெறுக்கின்ற அந்த இரண்டு மில்லியன் டாலர்களை இப்போது வெறுத்தொதுக்குகிறேன்.
அந்தப்பணத்தைக் கோர உரிமை இல்லாதவனாக மாற வேண்டி நான் இங்கிருந்து ஒப்பந்தம்
செய்ய்யப்பட்டதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே வெளியேறுகிறேன்......அதன் மூலம் ஒப்பந்தத்தை முறிக்கிறேன்...
படித்து முடித்த பின் வட்டிக்கடைக்காரன் தாளை மேசையின் மீது வைத்து விட்டு புதிரான அந்த மனிதனின் தலையில் முத்தமிட்டான்; அழத்
தொடங்கினான். அந்த விடுதியை விட்டு வெளியே வந்தான். பங்குச்சந்தையில் மிகப்பெரிய இழப்பு
ஏற்பட்ட சமயத்தில் கூட அவன் தன் மீது இத்தனைக் கழிவிரக்கம் கொண்டதில்லை. வீட்டிற்குச் சென்று படுக்கையில் சாய்ந்த பின்பும் அவனுடைய கண்ணீரும் உணர்ச்சிகளும்
பல மணி நேரத்திற்கு அவனைத் தூங்கவிடாமல் செய்தன.
அடுத்த நாள் காலை காவல்காரன் வெளிறிய முகத்துடன் ஓடிவந்து விடுதியில்
இருந்த மனிதன் சன்னல் வழியாக ஏறித் தோட்டத்துக்குள் குதித்து வாயிலுக்குச் சென்று பின்னர்
மறைந்துவிட்டதாக வட்டிக்கடைக்காரனிடம் சொன்னான். வட்டிக்கடைக்காரன் வேலைக்காரர்களுடன் விடுதி வரை சென்று கைதி வெளியே ஓடிவிட்டதை
உறுதி செய்து கொண்டான். தேவையில்லாத கிளர்ச்சிப் பேச்சுக்களைத்
தவிர்க்க வேண்டி மேசையிலிருந்து மில்லியன் டாலர்கள் வெறுக்கப்பட்டிருந்த அந்தத் தாளை
எடுத்துக்கொண்டான்; வீட்டுக்குச் சென்று அதனை அலமாரியில் வைத்துப்
பூட்டினான்.
ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில்
: சரவணன். கா